2வது திருமண வழக்கு: நீதிபதியின் சமரசத்தை ஏற்க சரிதா - முகேஷ் மறுப்பு
எர்ணாகுளம்: நடிகை சரிதா தனது கணவர் நடிகர் முகேஷின் இரண்டாவது திருமணத்தை ரத்து செய்யவேண்டுமென்று வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான சரிதாவும், முகேசும் நீதிபதியின் சமரசத்தை ஏற்க மறுத்துவிட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
நடிகை சரிதாவுக்கும், மலையாள நடிகர் முகேசுக்கும் கடந்த 1988ல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சரிதா தனது 2 மகன்களுடன் துபாயில் குடியேறியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் முகேஷ், சரிதாவிடம் இருந்து விவகாரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து பல முறை நோட்டீஸ் அனுப்பியும் நீதிமன்றத்தில் சரிதா ஆஜராகாததால் கடந்த 2012ஆம் ஆண்டு நீதிமன்றம் இவர்களுக்கு விவாகரத்து வழங்கியுள்ளது.
இதனையடுத்து 2013ஆம் ஆண்டு முகேஷ் கேரளாவை சேர்ந்த பிரபல நடன கலைஞரான மேதில் தேவியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகை சரிதா கடந்த ஆண்டு எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் முகேஷ் திருமணத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வந்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
எந்த நோட்டீசும் எனக்கு கிடைக்கவில்லை, எனவே இந்த விவாகரத்தை ரத்து செய்து முகேஷின் இரண்டாவது திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி மோகன்தாஸ் முன்னிலையில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது சரிதா, முகேஷ் இருவரும் ஆஜராயினர். அவர்களுக்கு இடையே நீதிபதி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.