சோலார் பேனல் மோசடி வழக்கு: சரிதா நாயருக்கு 3 ஆண்டு ஜெயில்!
கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி வழக்கில் தொழிலதிபர் சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் 2013-ம் ஆண்டு வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த மோசடியில் உம்மண் சாண்டி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதனால் முதல்வராக இருந்த உம்மன் சாண்டியின் உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திருவனந்தபுரம், பெரும்பாவூர், கோவை உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் சரிதா நாயர் மீது வழக்குகள் உள்ளன.
பெரும்பாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையில் சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணனுக்கும் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி வழக்கில் இது முதலாவது தீர்ப்பாகும்.