சோலார் பேனல் வழக்கில் தீர்ப்பு.. சரிதா நாயர், காதலர் பிஜூ குற்றவாளிகள் - 3 ஆண்டு சிறை
திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயரும், அவரது காதலர் பிஜு ராதாகிருஷ்ணன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபரான சரிதா நாயர், தனது காதலரோடு சேர்ந்து கேரளா தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும் சோலார் பேனல்களை பொருத்திக் கொடுப்பதாகக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சரிதா நாயரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். சரிதா மற்றும் பிஜூ மீது மொத்தம் 33 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
இந்நிலையில், அவற்றில் முதல் வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, இருவரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த பத்தனம்திட்டா கோர்ட், இருவருக்கும் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது.
அதோடு, சரிதாவுக்கு ரூ. 45 லட்சமும், பிஜுவுக்கு ரூ. 25 லட்சம் அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது.