சசிகலா டிஸ்சார்ஜ்: பெங்களூரு மருத்துவமனையில் இருந்து கிளம்பினார்
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் நிறைவுற்று அதிலிருந்து விடுதலை ஆனாலும், தொடர்ந்து கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவந்த சசிகலா இன்று (ஜனவரி 31, ஞாயிற்றுக்கிழமை) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
மருத்துவமனையிலிருந்து வெளியேறிய சசிகலா, அதிமுகவின் கொடி கட்டப்பட்ட காரில் அங்கிருந்து வெளியேறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க 50-க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை வளாகத்தின் முன்பு இன்று காலை முதலே கூடி இருந்தனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த பிப்ரவரி 2017-ல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி கைதான சசிசகலா கர்நாடகத்திலுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
நான்கு ஆண்டு தண்டனைக் காலம் முடிந்து, அபராதத் தொகையான 10 கோடி ரூபாயையும் செலுத்தியப் பின்னர், கடந்த ஜனவரி 27, 2021 புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் விடுதலையாவதற்கு சில தினங்களுக்கு முன், சசிகலாவின் உடல் நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை நிறைவடைந்துள்ள நிலையில், இன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறினார் சசிகலா.
அ.தி.மு.க-வின் பொதுச் செயலளாளராக பதவியில் இருந்த சசிகலா, கடந்த ஆகஸ்ட் 2017-ல் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், டி.டி.வி. தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தனியே நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா - சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கு வரலாறு
1991-1996: ஜெயலலிதா முதன் முறையாக முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். இந்தக் காலகட்டத்தில் தான் மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கப் போவதாக அறிவிக்கிறார். விரைவிலேயே ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்படுகிறது.
ஜூன் 14, 1996: அப்போது ஜனதாக் கட்சித் தலைவராக இருந்த சுப்ரமணியன் சுவாமி ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கைத் தொடர்கிறார்.
செப்டம்பர் 18, 1996: விசாரணை அதிகாரி நல்லமநாயுடு முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தார்.
டிசம்பர் 7-12: ஜெயலலிதாவின் வீட்டிலும் அவருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடக்கிறது.
ஜூன் 4, 1997: தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, குற்றப் பத்திரிகை தாக்கல்செய்யப்படுகிறது.
மே 14, 2001: மீண்டும் முதல்வராகிறார் ஜெயலலிதா. ஆனால், அதே ஆண்டு செப்டம்பர் 21 தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்.
நவம்பர் 2002: தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது செல்லாது என்று ஜெயலலிதா தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதன் பின்னர் விசாரணை துவங்குகிறது. தனி நீதிமன்ற நீதிபதியாக ஆர். ராஜமாணிக்கம் செயல்படுகின்றார்.
மார்ச் 2, 2002: மீண்டும் முதலமைச்சராகிறார் ஜெயலலிதா.
நவம்பர் 18, 2003: வழக்கை பெங்களூர் தனி நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிடுகிறது உச்ச நீதிமன்றம்
செப்டம்பர் 10, 2004: வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. பப்புசாரே நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
2005: பப்புசாரே ஒய்வுபெற்று மல்லிகார்ஜுனைய்யா நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
2005-2010: இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு மனுக்கள் தாக்கல்செய்யப்படுகின்றன.
2010 ஜனவரி 22: சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையைத் தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
டிசம்பர் 2010 - பிப்ரவரி 2011: சாட்சிகளை அரசுத் தரப்பு மறுவிசாரணை செய்கிறது.
மே 16, 2011: ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகிறார்.
அக்டோபர் 20, 21, நவம்பர் 22, 23 2011: பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்.
செப்டம்பர் 30, 2012: நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வுபெறுகிறார்.
அக்டோபர் 2013: ஜான் மைக்கல் குன்ஹா சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
ஆகஸ்ட் 28, 2014: வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிந்தன என்றும் தீர்ப்பு செப்டம்பர் 20ஆம் தேதி வழங்கப்படும் என்றும் நீதிபதி மைக்கல் குன்ஹா அறிவிக்கிறார்.
செப்டம்பர் 16: பாதுகாப்புக் காரணங்களுக்காக தீர்ப்பு வழங்கப்படும் இடமும் தேதியும் மாற்றப்படுகின்றன. தீர்ப்பு பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் என நீதிபதி அறிவிக்கிறார்.
செப்டம்பர் 27, 2014: 18 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஜெயலலிதா, சசிகலா குற்றவாளி என அறிவிப்பு.
மே 11, 2015: தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உட்பட நால்வரை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
டிசம்பர் 5, 2016: முதல்வர் ஜெயலலிதலா மறைவு
பிப்ரவரி 14, 2017: மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரை குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வந்தது.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்குமா? - உண்மை என்ன?
- மதுரையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு கோயில்: தேர்தல் நாடகமா?
- கொரோனா: ஒரு டோஸ் தடுப்பூசி உங்களை பாதுகாக்குமா? இரண்டாவது தேவையா?
- 'புலிகளை வெல்ல இந்தியாவின் நெருங்கிய உறவே காரணம்' - கோட்டாபயவின் ஆலோசகர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: