கர்நாடகா சீராய்வு மனு தள்ளுபடி... உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவு சசிகலாவுக்கு சாதகமா?
கர்நாடகா அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்துவிட்டது என்பதாலேயே உச்சநீதிமன்றத்தின் உத்தரவு சசிகலாவுக்கு இம்மியளவும் சாதகமே இல்லை என்கின்றனர் சட்டவல்லுநர்கள்.
டெல்லி: ஜெயலலிதாவை குற்றவாளி என பிரகடனம் செய்து அவருக்கு தண்டனை மற்றும் அபராதத் தொகையை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டதே தங்களது சாதகமானதாக துள்ளிகுதிக்கிறது சசிகலா கோஷ்டி. ஆனால் உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவால் சசிகலாவுக்கு இம்மியளவு கூட சாதகமே கிடையாது என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.
சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பிப்ரவரி 14-ந் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் ஜெயலலிதாவும் குற்றவாளி; ஆனால் அவர் இறந்துவிட்டதால் அவரை குற்றவாளி என பிரகடனம் செய்து சிறை தண்டனை விதிக்க முடியாது என கூறியது. அதே நேரத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கான 4 ஆண்டுகால சிறை தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
அதே நேரத்தில் பெங்களூரு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவுக்கு விதித்த ரூ100 கோடி அபராதத்தை வசூலிப்பது எப்படி என்பதில் எந்த தெளிவும் இல்லை. நீதிபதி குன்ஹாவும் இது தொடர்பாக தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடவில்லை.
சீராய்வு மனுவில் சொன்னது என்ன?
இதையடுத்தே உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒத்திவைக்கப்படும் போது ஜெயலலிதா உயிருடன்தான் இருந்தார். அதன்பின்னரே ஜெயலலிதா காலமானார். ஆகையால் அவர் குற்றவாளி என பிரகடனம் செய்து அவருக்கான சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகையை உறுதி செய்ய வேண்டும்; அத்துடன் அந்த அபராதத் தொகையை எப்படி வசூலிப்பது எனவும் விளக்கவும் கோரியிருந்தது கர்நாட்கா.
காரணம் இதுதான்
ஏனெனில் உச்சநீதிமன்றத்தின் பிப்ரவரி 14-ந் தேதி தீர்ப்பில் அபராதத்தை வசூலிப்பது தொடர்பான விளக்கம் இல்லை. ஆகையால் அந்த தீர்ப்பில் விளக்கம் கோரி சீராய்வு மனுவை கர்நாடகா தாக்கல் செய்தது.
ஜெ. குற்றவாளிதான்.. ஆனால்
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஜெயலலிதா குற்றவாளிதான்.. ஆனால் அவர் இறந்துவிட்ட காரணத்தால் அரசியல் சட்ட விதிகள் படி அவரை குற்றவாளி என பிரகடனம் செய்து சிறைத் தண்டனையை அறிவிக்க முடியாது; அபராதத்தையும் விதிக்க முடியாது எனக் கூறி கர்நாடகாவின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் 'குற்றவாளி' ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை கர்நாடகா அரசால் வசூலிக்க இயலாமல் போயுள்ளது. அவ்வளவுதான்.
சசிக்கு இம்மியும் சாதகம் இல்லை
இந்த உத்தரவு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு எந்த ஒரு வகையிலும் சாதகமாகவே அமையாது என்கின்றனர் சட்டவல்லுநர்கள். ஜெயலலிதாவும் குற்றவாளி; ஆனால் அவருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியாது என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதே தவிர ஏ-1 ஜெயலலிதாவே குற்றவாளியே என கிடையாது என்றெல்லாம் உச்சநீதிமன்றம் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதாவை வழக்கில் இருந்தும் விடுவிக்கவும் இல்லை. ஆகையால் சசிகலா தரப்புக்கு இது இம்மியளவு சாதகமுமே இல்லை என்றும் அவர்கள் சுட்டி காட்டுகின்றனர்.
இலவு காத்த கிளிதான்!