அடுத்தடுத்து 'சிறை மீட்பு' ஆபரேஷன் தோல்வி... சசி கோஷ்டியின் புதிய ப்ளான் 'டார்கெட் '75'
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை 75 நாட்களில் சிறையில் இருந்து வெளியே கொண்டு வர திட்டமிட்டு வழக்கறிஞர் குழு செயல்பட்டு வருகிறது.
பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவை 75 நாட்களில் வெளியே கொண்டு வந்து கட்சியை தக்க வைத்துக் கொள்ள திட்டமிட்டு சட்டவல்லுநர்கள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலிலிதா முதலமைச்சராக இருந்த போது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் வழக்கில் தொடர்புடைய சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கும் சிறைத்தண்டனை உறுதியானது
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று ஓ.பன்னீர்செல்வம் எதிர்அணியாக செயல்பட்ட நெருக்கடியாக நேரத்தில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். அவருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு கால சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்ட நிலையில் சிறையில் இருந்து வெளியே வர பல்வேறு திட்டங்களை சசிகலா வகுத்து வருகிறார்.
அடுத்தடுத்து தோல்வி
ஏற்கனவே சசிகலாவை வெளியே கொண்டுவர போட்டத்திட்டங்களில் இரண்டு தோல்வியை சந்தித்துள்ள நிலையில் புதிய திட்டத்தை அவரது குடும்பம் முன்னெடுத்துள்ளது. அதுதான் "டார்கெட் 75 நாட்கள்" - அதாவது அடுத்த 75 நாட்களில் சசிகலாவை சுதந்திரப்பறவையாக மாற்றும் திட்டம்.
என்னாவாகும் மறுசீராய்வு மனு?
சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள சிறைதண்டனை தீர்ப்புக்கு எதிராக சசிகலா தரப்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்னும் சில வாரங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த மனு விசாரிக்க உகந்ததா அல்லது தள்ளுபடி ஆகுமா என்பதே இப்போதைக்கு சசிகலா குடும்பத்தாரின் கவலையாக இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும், உத்வேகத்தை அளிக்கும் திட்டமொன்றை அவர்களது வழக்கறிஞர் ஒருவர் வடிவமைத்துள்ளார் அதுதான் - "டார்கெட் 75 நாட்கள்"
அது என்ன? “டார்கெட் 75 நாட்கள்”
இப்போதைக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்யமுடியாது. அதைச்செய்யவேண்டும் என்றால், அதற்கு முன்பு பல வேலைகள் செய்தாகவேண்டும். ஒன்று சீராய்வு மனுதாக்கல், அடுத்தது கியூரேட்டிவ் மனுதக்கல், அடுத்தது ஜாமீன் மனுதாக்கல் - இப்படி தொடர் மனுதாக்கல் பயனாகவும், அரசியல் சதுரங்க நகர்த்தல் மூலமாக நிரந்தரமாக சசிகலாவை 75 நாட்களுக்குள் வெளியே கொண்டுவருவது - இதுதான் "டார்கெட் 75 நாட்கள்"
இது நடக்குமா?
சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா உயிருடன் இல்லை. ஜெயலலிதா மட்டுமே அரசு ஊழியர். லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு அரசு ஊழியருக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், மரணத்திற்கு பிறகு ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதால், இந்த வழக்கு நீர்த்துப்போக வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். இந்த வாதத்தை கியூரேட்டிவ் மனுவில் முன்வைக்க சசிகலா அணி தயாராகிவருகிறது. சீராய்வு மனு தள்ளுபடி அல்லது பலனளிக்கவில்லை என்றால் அடுத்தது கியூரேட்டிவ் மனு தாக்கல் செய்யவும் திட்டமுள்ளது