15 நாட்கள் லீவ் கேட்டு சசிகலா பெங்களூரு சிறையில் மீண்டும் மனுத்தாக்கல்!
சசிகலாவுக்கு நேற்று பரோல் மறுக்கப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட கூடுதல் ஆவணங்களை சேர்த்து கர்நாடக சிறையில் புதிய மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.
பெங்களூரு: நேற்று பரோல் மறுக்கப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட கூடுதல் ஆவணங்களை சேர்த்து கர்நாடக சிறையில் சசிகலா புதிய மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் பரோல் கோரிக்கை மனுவை கர்நாடகச் சிறைத்துறை நேற்று நிராகரித்தது.
சசிகலாவின் கணவர் நடராஜன், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது
நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் கணவர் நடராஜனின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு தனக்கு 15 நாள்கள் பரோல் விடுப்பு அளிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில்
கர்நாடகச் சிறைத்துறைக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து தசரா விடுமுறைக்குப் பிறகு சசிகலாவுக்கு பரோல் கிடைத்துவிடும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், சசிகலாவின் பரோல் மனு கோரிக்கையைச் சிறைத்துறை அதிகாரிகள் நேற்று நிராகரித்தனர். கணவர் உடல்நிலையைக் காரணம் காட்டி பரோல் கோரியுள்ள சசிகலாவின் விண்ணப்பத்தில், கணவர் நடராஜனின் மருத்துவச் சான்றிதழ் இணைக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் லீவுக்க தேவையான கூடுதல் ஆவணங்களை சேர்த்து சசிகலா புதிய மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். 15 நாட்கள் லீவ் கேட்டு அவர் விண்ணப்பித்துள்ளார்.
மனுவில் நடராஜனின் மருத்துவ அறிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியின் அனுமதி பெற்ற சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 7 மணிக்குள் சசிகலாவுக்கு லீவ் கிடைக்காவிட்டால் மேலும் 2 நாட்கள் தாமதமாகும். கர்நாடகாவில் நாளை வால்மிகி தின விடுமுறை என்பதால் சசிகலாவுக்கு இன்று அனுமதி கிடைத்தாக வேண்டும் இல்லையெனில் மேலும் நாட்கள் தள்ளிப்போகும் நிலை உருவாகியுள்ளது.