சிறையிலிருந்து விவேக், தினகரனுக்கு "ஆன்ஸர் ஷீட்" அனுப்பிய சசிகலா!
பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா, தனது வழக்கறிஞர் மூலமாக தினகரன் மற்றும் விவேக் ஜெயராமனுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா ஐடி ரெய்டு குறித்து தமது வழக்கறிஞர்கள் மூலம் விவேகிற்கும், தினகரனுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் கடந்த வியாழக்கிழமை 187 இடங்களில் சோதனையை நடத்தினர். 5 நாள்களுக்கு பின்னர் கடந்த திங்கள்கிழமை சோதனைகள் நிறைவு பெற்றன.
சுமார் 5 நாள்கள் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் தங்க, வைர நகைகள், ரொக்க பணம் என பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தகவலை சிறையில் உள்ள சசிகலா அறிந்து கொண்டு மிகவும் மனம் வருந்தினார்.
பத்திரிகைகள் வாசித்த சசி
இந்த ரெய்டால் மிகுந்த மனஉளைச்சல் அடைந்த சசிகலா கடந்த 5 நாள்களாக சிறிதும் கண்கொட்டாமல் தமிழ் டிவி சேனல்களை பார்த்துள்ளார். பிறகு விடிந்தும் விடியாததுமாக நூலகத்துக்கு சென்று தமிழ் நாளேடுகளை வரி விடாமல் படித்துள்ளார்.
அண்ணியிடம் புலம்பல்
ரெய்டால் வெலவெலத்துக போன சசிகலா தூக்கத்தை இழந்து அண்ணி இளவரசியிடம் புலம்பியுள்ளார். பின்னர் சிறைத் துறை மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வழக்கறிஞர் அசோகனை வரவழைத்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். சட்ட ரீதியிலான ஆலோசனைகளை சசிகலா பெற்றதாக கூறப்படுகிறது.
வழக்கறிஞர் மூலம்...
இதையடுத்து தான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த கடிதங்களை வழக்கறிஞரிடம் சசிகலா அளித்துள்ளார். அவற்றை விவேக் ஜெயராமனிடமும், தனது அக்காள் மகன் தினகரனிடமும் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
கடிதத்தில் சசிகலா கூறியது என்ன?
அந்த இருவேறு கடிதங்களில் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் எந்த மாதிரியான ஆவணங்கள், கோப்புகளை சமர்ப்பிக்க வேண்டும், எந்த கேள்விக்கு எந்த மாதிரியான பதில்களை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விஷயங்களை சசிகலா தெரிவித்துள்ளார். இதன் மூலம் யாருக்கும் சிக்கல் ஏற்படாதவண்ணம் சசிகலா காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.