ரூபாய் கொடுத்தது உண்மைதான் போல.. ரூபா சொன்னதும் நடந்திருக்கும் போல.. சிறையில் சசிக்கு தனி "கிச்சன்"!
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு தனி சமையலறை இருந்தது உண்மைதான் என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Recommended Video
பெங்களூர்: பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு தனி சமையலறை இருந்ததும் பல சலுகைகள் வழங்கப்பட்டதும் உண்மை என்று கர்நாடக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 11-ஆம் தேதி சசிகலாவுக்கு சிறப்பு சமையல் கூடம், 5 அறைகள், பார்வையாளர்களை சந்திக்க தனி அறை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டதாக அங்கு ஆய்வு நடத்திய சிறை துறை டிஐஜியாக இருந்த ரூபா குற்றம்சாட்டினார்.
உயர் அதிகாரி மீது லஞ்சம் புகார்
இந்த சலுகைகளை சசிகலாவுக்கு வழங்குவதற்காக சிறை துறை ஏடிஜிபி சத்தியநாராயணா ரூ. 2 கோடியை லஞ்சமாக பெற்றார் என்றும் அவர் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து சசிகலாவும், இளவரசியும் சிறையிலிருந்து ஹாயாக ஷாப்பிங் செல்லும் வீடியோவும் வெளியானது.
ஓய்வு பெற்ற அதிகாரி
இதையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்தது மாநில அரசு. இதையடுத்து வினய்குமார் சிறைக்கு ஆய்வு நடத்தினார். மேலும் ரூபா கொடுத்த ஆதாரங்களை ஆய்வு செய்த அவர் ரூபாவிடமும், சத்திய நாராயணாவிடமும் விசாரணை நடத்தினார்.
4 மாதங்கள் எடுத்து கொண்ட குழு
அறிக்கையை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆயினும் கால அவகாசம் கேட்கப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகே இந்த அறிக்கை வினய்குமார் கர்நாடக அரசிடம் தாக்கல் செய்தார்.
சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கியது உண்மை
அந்த அறிக்கையில், சிறையில் சசிகலாவுக்கு தனி சமையலறை இருந்தது உண்மைதான். மற்ற கைதிகளுக்கு அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்களை காட்டிலும் சசிகலாவை அதிக நபர்கள் சந்தித்துள்ளனர். சட்டத்துக்கு புறம்பாகவும் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன என்று வினய்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நிரூபிக்க முடியவில்லை
ஏடிஜிபி சத்யநாராயணா ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக சிறை துறை டிஐஜியாக இருந்த ரூபா குற்றம்சாட்டியிருந்தார்.ஆனால் புகாருக்கு எந்த விதமான ஆதாரங்களும் இல்லை என்று வினய்குமார் அறிக்கை கூறுகிறது. அறிக்கையில் சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை என்பதால் சசிகலாவுக்கு சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது.