எல்இடி டிவி, நவீன சமையலறை, ஹோட்டல் உணவுடன் சசிகலா ராஜபோக வாழ்க்கை... ரூபா மீண்டும் உறுதி
எல்இடி டிவி, நவீன சமையலறையுடன் சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது உண்மைதான் என்று சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா தெரிவித்தார்.
பெங்களூர்: பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது உண்மைதான் என்று ரூபா மீண்டும் உறுதிபட தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த சிறையில் கடந்த சில நாள்களுக்கு முன் சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறையில் முறைகேடுகள் இருப்பதாகவும், சசிகலா அறையில் நவீன சமையலறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ரூபாவுக்கு தெரியவந்தது.
இதன் பேரில் அவர் தனது உயரதிகாரி மாநில டிஐஜி தத்தாவுக்கு அறிக்கை அளித்தார். இது தமிழக, கர்நாடக அரசியலில் பெரும் புயலை வீசியது.
ரூபா இடமாற்றம்
இதைத் தொடர்ந்து சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா பெங்களூரு மாநகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையராக மாற்றப்பட்டு பணியாற்றி வருகிறார். சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உண்மைதான் என்று ரூபா மீண்டும் உறுதிப்படுத்தினார்.
நவீன வசதிகள்
இதுகுறித்து தனியார் தொலைகாட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், சசிகலாவுக்கு அவருடைய அறையில் நவீன வசதியுடன் கூடிய எல்இடி டிவி வைக்கப்பட்டு இருந்தது. கட்டில், மெத்தை, டிவி, நவீன சமையலறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தன.
வெளியே இருந்து உணவு
சசிகலாவுக்கு என்று தனி சமையல் அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. இதன்மூலம் அவர் விரும்பிய உணவுகள் சமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. சில வேளைகளில் சிறைக்கு வெளியே இருந்தும் அவருக்கு உணவு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. கைதிகளை அவர்களது உறவினர்கள் சிறையில் உள்ள பார்வையைாளர் ஹாலில்தான் சந்தித்து பேச வேண்டும். அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் 6-வது எண் கொண்ட கேமரா கைதிகளையும், 7-வது எண் கொண்ட கேமரா பார்வையாளர்களையும் படம் பிடிக்கும்.
13 முறை சந்திப்பு
சிறையில் சசிகலா 13 முறை பார்வையாளர்களை சந்தித்து இருந்தாலும்கூட ஒருமுறை கூட சசிகலாவின் உருவமோ, அவரை சந்தித்த வந்த பார்வையாளர்களின் உருவமோ இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகவில்லை. சிறை விதிமுறைகளின்படி, வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட கைதி சிறை சீருடையை அணிய வேண்டும்.
விரும்பிய ஆடை
ஆனால், அவர் சிறை சீருடை அணியாமல் தான் விரும்பிய ஆடைகளை அணிந்து இருந்தார். சசிகலாவுக்கு தண்டனை விதித்த நீதிமன்றம் அவருக்கு சிறையில் ‘ஏ' வகுப்பு அறையை ஒதுக்க வேண்டும் என்று கூறவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு தனி அறை ஒதுக்கியதாக கூறினாலும் அப்படி சிறப்பு வசதி செய்யும் போது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு முறைப்படி தெரிவித்து அனுமதி பெற வேண்டும். ஆனால் அப்படி எந்த அனுமதியும் பெறவில்லை.எனவே இது அப்பட்டமான சிறை விதிமீறல் ஆகும்.
சிரித்தார்
நான் சசிகலா அறைக்கு சென்றபோது அவர் சாதாரண உடையில் தான் இருந்தார். என்னை பார்த்ததும் அவர் சிரித்தார். நானும் சிரித்துவிட்டு வந்துவிட்டேன். அவரிடம் எதுவும் பேசவில்லை என்றார் ரூபா.