15 நாட்கள் கேட்ட சசிகலாவுக்கு 5 நாள் பரோல் கொடுத்தது கர்நாடக சிறை!
கணவர் நடராஜனை பார்க்க சசிகலாவுக்கு கர்நாடக சிறை 5 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது.
Recommended Video
பெங்களூரு: பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கர்நாடக சிறை 5 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டணை பெற்றுள்ள சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனை காரணம் காட்டி பெங்களூரு சிறையில் சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்தார்.
பரோல் கோரி புதிய மனு
போதுமான ஆவணங்கள் இல்லை எனக்கூறி சிறை நிர்வாகம் கடந்த செவ்வாய்க்கிழமை அவரது பரோல் கோரிக்கையை நிராகரித்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கூடுதல் ஆவணங்களை சேர்த்து சசிகலா புதிய மனு தாக்கல் செய்தார்.
பரோல் கிடைத்ததாக தகவல்
இந்நிலையில் நேற்று மாலை டிடிவி தினகரன் பெங்களூரு புறப்பட்டு சென்றார். இதைத்தொடர்ந்து இரவு 10 மணியளவில் சசிகலாவுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பரோல் கிடைத்துவிட்டதாக தகவல் வெளியானது.
வால்மிகி ஜெயந்தி விடுமுறை
ஆனால் கர்நாடக மாநில அதிமுக செயலாளரான புகழேந்தி இதனை மறுத்தார். நேற்று வால்மிகி ஜெயந்தி விடுமுறை என்பதால் இன்றுதான் அவருக்கு பரோல் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
பரோல் கிடைத்தது
இதையடுத்து சசிகலாவுக்கு இன்று பரோல் வழங்கப்பட்டது. 15 நாட்கள் பரோல் கேட்ட சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை 5 நாட்கள் வழங்கியுள்ளது.
10ஆம் தேதி மீண்டும் சிறைக்கு
சசிகலா வரும் 10ஆம் தேதி மீண்டும் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று சென்னை வரும் சசிகலா கணவர் நடராஜனை மருத்துவமனையில் சந்திப்பார் எனத் தெரிகிறது.