பரப்பன அக்ரஹார சிறையில் பிரத்யங்கிரா தேவியை வழிபடும் சசிகலா
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா பிரத்யங்கிரா தேவி மந்திரத்தை கூறி வழிபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது,
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கிற்காக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அங்கே மனஅமைதிக்காகவும், எதிரிகளை வெல்லவும் பிரத்தியங்கிரா தேவி மந்திரத்தை கூறி வழிபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறை தண்டணை, ரூ. 10 கோடி அபராதம் பெற்றுள்ள சசிகலா கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பெங்கரூவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அவர் கேட்ட வசதிகள் கிடைக்கவில்லை என்பதால் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறாராம். தன்னை பார்க்க வரும் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களிடம் பேசும் பேச்சிலேயே அது வெளிப்படுகிறதாம்.
ஒருமாத சிறைவாசம்
சசிகலா சிறையில் அடைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. சிறையில் சரியான வசதியில்லை, கொசுக்கடியால் இரவில் தூக்கமின்றி தவிக்கிறாராம். பகலிலும் உறக்கம் வரவில்லையாம்.
சிறை உணவுதான்
பெங்களூரு சிறையில் கொடுக்கப்படும் ராகி களி, புளியோதரை, சப்பாத்தி, சாம்பார்தான் சசிகலாவிற்கு கொடுக்கிறார்கள். வீட்டு உணவு, மருந்து, மாத்திரைகளுக்கு தடை விதித்து விட்டனர். இதனால் இளைத்து போய்விட்டாராம் சசிகலா.
அமைச்சர்களிடம் புலம்பல்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னை காண வந்த அமைச்சர்களிடம் புலம்பு தீர்த்து விட்டாராம் சசிகலா. டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பற்றியும் பேசினாராம் சசிகலா. முன்னாள் அமைச்சர்கள் பலரும் இப்போது சசிகலாவை சந்தித்து பேசி வருகிறார்களாம்.
பிரத்தியங்கிரா தேவி பூஜை
சிறையில் சசிகலா அவ்வப்போது பூஜை செய்கிறாராம். பிரத்யங்கிரா தேவியை வழிபடுகிறாராம் சசிகலா. இதன்மூலம் எதிரிகளை வெல்லலாம், நோய்கள், குழப்பங்கள், கஷ்டங்கள் தீரும் என்பது சசிகலாவின் நம்பிக்கை. சென்னையில் இருந்த போது அமாவாசை, பவுர்ணமி பூஜைகளில் சசிகலா பங்கேற்பார். இப்போது சிறையில் இருப்பதால் பிரத்யங்கிரா தேவி மந்திரத்தை மட்டுமே கூறி பூஜை செய்து வருகிறாராம் சசிகலா.