முதல்வர் பதவிக்கு தகுதியே இல்லாதவர் சசிகலா - சசிகலா புஷ்பா பாய்ச்சல்
தமிழக முதல்வர் பதவிக்கு தகுதியே இல்லாதவர், அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
டெல்லி: அதிமுக சட்டசபைக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விரைவில் தமிழக முதல்வராகவும் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சசிகலா மீது இன்னும் சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தமிழத்தின் மிகவும் முக்கியம் வாய்ந்த பொறுப்புக்கு சசிகலா வரலாமா என்று கேள்வி பலரும் எழுப்பியுள்ளனர். தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக போகும்பட்சத்தில், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தேர்தலில் போட்டியிடுவதும் தடைபடும். கட்சியிலும் நிர்வாக சிக்கல்கள் ஏற்படும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சசிகலா சட்டசபைக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா கருத்து கூறியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, ல்வர் பதவிக்கு சசிகலா நடராஜன் வருவதை தமிழக மக்களும் இளைஞர்கள் விரும்பவில்லை என்றார்.
சசிகலா நடராஜன் அவசரம் அவசரமாக பதவியேற்க பேராசைப் படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய சசிகலா, குற்றச் செயலுக்காக கீழ் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர் என்று கூறினார்.
எந்தவிதமான அரசியல் பணிகளிலும் ஈடுபடாதவர், கட்சிக்காக எந்த போராட்டங்களிலும் ஈடுபடாதவர் சசிகலா. சிகலாவிற்கு பதவி வழங்கப்பட்டதை கண்டு அதிமுக தொண்டர்கள் கொதித்து போயுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் சசிகலா முதல்வராக ஆசைப்படலாமா என்றும் கேட்டுள்ளார் சசிகலா புஷ்பா. தமிழக முதல்வர் பதவிக்கு தகுதியே இல்லாதவர், அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.