போலி முன்ஜாமீன் மனு: மதுரை கோர்ட்டில் நேரில் ஆஜராக விலக்கு கோரி சுப்ரீம்கோர்ட்டில் சசிகலா புஷ்பா மனு
டெல்லி: போலி முன்ஜாமின் மனு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன், தாயார் மீது பணிப்பெண்கள் பானுமதி, ஜான்சிராணி இருவரும் தூத்துக்குடி போலீசில் புகார் கொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா மனுத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதனடிப்படையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சசிகலா புஷ்பா முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது அரசுத் தரப்பில், வெளிநாட்டில் இருக்கும் சசிகலா ஆகஸ்ட் 17-ந் தேதி மதுரையில் வழக்கறிஞர்கள் முன்னிலையில் வக்காலத்தில் கையெழுத்திட்டதாக பொய் கூறி இருக்கிறார். இது போலியான முன்ஜாமீன் மனு என்று கூற நீதிமன்றம் அதிர்ந்தது.
உடனே சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞரும் முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக கூறினார். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஆகஸ்ட் 29-ந் தேதி மனுவில் கையெழுத்திட்டது குறித்து சசிகலா புஷ்பாவும் அவரது குடும்பத்தினரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.