2-வது கணவர் ராமசாமியின் 2-வது மனைவி சத்யபிரியா குழந்தையை வளர்க்க விரும்புகிறேன்: சசிகலா புஷ்பா
2-ஆவது கணவர் ராமசாமியின் குழந்தையை வளர்க்க விரும்புகிறேன் என்று சசிகலா புஷ்பா எம்பி தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: 2-ஆவது கணவர் ராமசாமியின் 2-ஆவது மனைவி சத்யபிரியா குழந்தையை வளர்க்க விரும்புகிறேன் என்று சசிகலா புஷ்பா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
எம்பி சசிகலா புஷ்பா வழக்கறிஞர் ராமசாமியை 2-ஆவது திருமணம் செய்யப்போவதாக அழைப்பிதழ்கள் உலா வந்தன. இதனிடையே தன் கணவரை மீட்டுக் கொடுக்கும் படி ராமசாமியின் 2-ஆவது மனைவி சத்யபிரியா கைக்குழந்தையுடன் மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த திருமணத்துக்கு தடை விதித்திருந்தது. எனினும் இருவரது திருமணமும் திட்டமிட்டப்படி டெல்லியில் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்றது.
சத்யபிரியா கொடுமை
தான் சசிகலா புஷ்பாவை ஏன் திருமணம் செய்து கொண்டேன் என்பது குறித்து ராமசாமி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் எனது முதல் மனைவியும் , மகனும் விபத்தில் இறந்துவிட்டனர். நானும் என் மகளும் மட்டுமே உயிர் பிழைத்தோம். மகள் சிறிய குழந்தை என்பதால் அவரை பார்த்துக் கொள்வதற்காக சத்யபிரியாவை 2-ஆவதாக திருமணம் செய்து கொண்டேன்.
மறைத்தார்
ஆனால் அவரோ தனக்கு நடைபெற்ற முதல் திருமணத்தை மறைத்துவிட்டு என்னை திருமணம் செய்து கொண்டார். எனது மகளை கொடுமைப்படுத்தினார். அவருடைய தம்பி என் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுதொடர்பாக டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளேன். அதுபோல் நான் சிம்லாவில் இருந்தபோதும் அவர் என் மகளுக்கு தொல்லை கொடுத்துள்ளார். எனவே சிம்லா போலீஸிலும் புகார் கொடுத்துள்ளேன். எனது மகளின் எதிர்காலத்துக்காகவும் பாதுகாப்புக்காகவும் சசிகலா புஷ்பாவை திருமணம் செய்து கொண்டேன். எங்களது திருமணம் சட்டபடி செல்லும் என்றார்.
அனைத்து தெரியும்
இதுகுறித்து சசிகலா புஷ்பா கூறுகையில், நான் என் கணவர் லிங்கேஷ்வரனை விவாகரத்து செய்துவிட்டுதான் ராமசாமியை திருமணம் செய்துள்ளேன். தமிழக அரசு என் மீது தொடர்ந்த வழக்குகளை சமாளிக்க கடந்த ஓராண்டாக ராமசாமி எனக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார். எனவே அவரது பிரச்சினைகள் அனைத்தும் எனக்கு தெரியும்.
கஷ்டமாகத்தான் இருக்கிறது
சத்யபிரியா குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு அழுதுகொண்டே ஓடியதை டிவியில் பார்த்தபோது கஷ்டமாகத்தான் இருந்தது. அந்த குழந்தையை என்னிட்ம வாங்கி தாருங்கள், நான் வளர்க்கிறேன் என்று ராமசாமியிடம் பலமுறை சொல்லிவிட்டேன். இதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. சத்யபிரியாவின் பின்னால் இருப்பது அரசியல். நான் டிடிவி தினகரன் அணியில் இருப்பாதல் இதுபோல் நெருக்கடிகளை எனக்கு கொடுக்கின்றனர் என்றார் சசிகலா புஷ்பா.