கணவரோடு சென்று சிறையிலுள்ள சசிகலாவிடம் ஆசி பெறப்போகிறேன்.. சசிகலா புஷ்பா உருக்கம்!
பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெறுவேன் என்று 2வது திருமணம் செய்து கொண்ட சசிகலா புஷ்பா எம்.பி. தெரிவித்துள்ளார்.
டெல்லி : கணவர் ராமசாமியுடன் சேர்ந்து பெங்களூரு சிறை சென்று சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெறுவேன் என்று சசிகலா புஷ்பா எம்.பி கூறியுள்ளார்.
அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா கடந்த மார்ச் மாதத்தில் டெல்லியில் 2வது திருமணம் செய்து கொண்டார். முதல் கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்ற கையோடு தனது சட்ட ஆலோசகராக இருந்த ராமசாமியை சசிகலா புஷ்பா 2வது திருமணம் செய்து கொண்டார்.
சசிகலா புஷ்பாவின் 2வது திருமணம் குறித்து பலரும் விமர்சனம் கூறி வந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, 41 வயதில் நான் 2வது திருமணம் செய்து கொண்டதை சிலர் கேலி செய்கின்றனர். அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை.
வாழ காலம் இருக்கிறது
நான் தைரியமானவள், வாழ்வதற்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. என்னுடைய எஞ்சிய வாழ்க்கையை வாழ்க்கையை நிம்மதியாக, நேர்மையாக கழிக்க விரும்புகிறேன்.
ஓ.பிஎஸ் பதவிக்காக வாழ்கிறார்
சசிகலாவை தொடக்கத்தில் நான் கடுமையாக விமர்சித்தது உண்மைதான். அரசியலில் இவையெல்லாம் சகஜமான விஷயம். ஓ.பன்னீர்செல்வம் நல்லவர் என்று நினைத்து முன்பு அவரை ஆதரித்தேன். ஆனால் அவர் பதவிக்காகத்தான் வாழ்கிறார் என்பது புரிந்தது.
சசிகலா நல்லவர்
அடுத்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்லவர் என்று நினைத்தேன். அவரும் பதவிக்காக காலில் விழுந்து சசிகலாவுக்கே துரோகம் செய்தார். இவர்களுடன் ஒப்பிடுகையில் சசிகலா மிகவும் நல்லவர் அவர் சிறையில் கஷ்டப்படுகிறார்.
சசிகலாவை சந்திப்பேன்
எங்கள் திருமணத்துக்காக சசிகலாவுக்கு பத்திரிகை வைக்க விரும்பினோம். ஆனால் எங்கள் திருமணத்தை கிண்டல் செய்து மனஉளைச்சல் கொடுத்ததால் யாருக்கும் திருமண பத்திரிகையை கொடுக்கவில்லை. விரைவில் பெங்களூரு சென்று சிறையில் சசிகலாவை சந்தித்து நானும், எனது கணவரும் வாழ்த்து பெறுவோம் என்று சசிகலா புஷ்பா கூறினார்.