"மேடம்" செரீனா, "சின்னம்மா" கணவருக்கு நடந்தது எனக்கும் நடக்கும் என தெரியும்: சசிகலா புஷ்பா
டெல்லி: மேடம் செரீனா மற்றும் சின்ன மேடம் சசிகலாவின் கணவர் பழிவாங்கப்பட்டது போல் எனக்கும் ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்பதை உணர்ந்துள்ளேன். எந்த வகையில் ஆபத்து வரும் என்று தெரியாது என ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா பேட்டியளித்தார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியுள்ளதாவது: எனது குடும்பத்தினரே இப்போது பயந்துள்ளார்கள். 'தமிழ்நாட்டில் சி.எம்-ஐ எதிர்த்துப் போராட முடியாது. அவங்க கொடுத்த பதவியை திருப்பிக் கொடுத்திடு' என்கிறார்கள். ஏற்கெனவே செரீனா என்ற பெண்ணின் மீது என்ன என்ன வழக்குகள் பாய்ந்தன என்பதும் சின்ன மேடம் சசிகலாவின் கணவரே ஜெயிலில் எவ்ளோ நாள் இருந்தார்.
அவரின் சகோதருக்கு என்ன நடந்தது என்பது எல்லா தெரியும். அவர்களுக்கே அந்த கதி என்றால். எனக்கும் எனது கணவர், எனது மகனுக்கும் எதுவேனாலும் நடக்கலாம். எனக்கு உண்மை மட்டும் தெரியும்.
முன்னதாக, சென்னை போயஸ் கார்டனில் இருந்து நேரடியாக டெல்லி அழைத்து வரப்பட்டேன். விமானத்தில் கூட என்னை எங்கும் செல்ல அனுமதிக்கவில்லை. எனது மொபைல் போனை பிடுங்கி வைத்துக் கொண்டார்கள். டெல்லியிலும் என்னை வீட்டுக்குப் போகவிடவில்லை. என் குடும்பத்தினரை சந்திக்க விட வில்லை. நான் சண்டை போட்டுத்தான் வீட்டில் உட்கார்ந்து இருந்தேன். எனக்கு மிரட்டல் இருக்கிறது. அது தொடரும். வேறு ரூபத்திலும் நடக்கும்.
அவையில் காங்கிரஸ், பி.எஸ்.பி., காங்கிரஸ் தலைவர்கள் சோனியாஜி, ராகுல்ஜி என்று எல்லோரும் எனக்கு சப்போர்ட் பண்ணி இருக்காங்க. அது எனக்கு நம்பிக்கையைக் கொடுத்து இருக்கு. வெங்கய்யா நாயுடுஜி எனக்குப் பாதுகாப்புக் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். கனிமொழியும் எனக்கு முழு சப்போர்ட் கொடுத்தார். எனக்கோ எனது குடும்பத்தினருக்கோ ஏதாவது நேர்ந்தால், அதுக்கு அ.தி.மு.க. தலைமைதான் பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.