எனக்கு உங்க சிஎம்மையே தெரியும்.. சிறைக்குள் ரூபாவை மிரட்டிய சசிகலா?
பெங்களூர்: நான் யார் தெரியுமா, எனக்கு முதல்வரையே தெரியும் என்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையை ஆய்வு செய்ய வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபாவிடம் அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலா மோதலில் ஈடுபட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா சமீபத்தில் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குள் சோதனையிட்டபோது, சசிகலாவுக்கு மட்டும் ஏகப்பட்ட சலுகைகள் செய்யப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
சசிகலா அறையை ரூபா சோதனையிட சென்றபோது அதற்கு சசிகலா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துளார். இதனால் சசிகலாவுக்கும் ரூபாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது.
வாக்குவாதம்
சசிகலாவை குறிப்பிட்டு சிறைக் கைதிக்கு என்ன இவ்வளவு சலுகைகள் என ரூபா, சக போலீசாரிடம் கேள்வி எழுப்பினார். அதனால் சசிகலா கோபமடைந்து, ரூபாவை சரமாரியாக திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். உன்னுடைய முதல்வர் முதல் உன் உயர் அதிகாரி வரை எல்லோரையும் எனக்கு தெரியும். அவர்களே பேசாமல் இருக்கும்போது உனக்கு என்ன இங்கு வேலை? என சசிகலா, ரூபாவை பார்த்து எச்சரிக்கும் வகையில் சீறியதாக கூறப்படுகிறது.
ரூபா திட்டம்
இன்னும் ஒருபடி மேலே போய், என்னை பகைத்துக்கொண்டால், இன்னும் ஒரே வாரத்தில் உன்னை இங்கிருந்து வேறு இடத்திற்கு டிரான்ஸ்பர் செய் வைக்க என்னால் முடியும் என்று சசிகலா, ரூபாவை எச்சரித்தாராம். அப்போதுதான் ரூபாவுக்கு, சசிகலாவுக்கு கர்நாடக அரசிலுள்ள செல்வாக்கு புரிந்துள்ளது. எனவேதான் இதை வேறு மாதிரி கையாள வேண்டும் என ரூபா முடிவு செய்துள்ளார்.
ரகசிய வீடியோ
இதையடுத்து, சிறைக்குள் நடந்த அட்டூழியங்களை அவரே ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டார். சசிகலாவுக்கு எங்கிருந்து டிவி, ரெப்ரிஜிரேட்டர், வாஷிங் மெஷின், கட்டில் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வந்தன என்பதை விசாரித்து பார்த்தபோது, ஓல்டு ஏர்போர்ட் சாலையில் அமைந்துள்ள ஒரு எலக்ட்ரானிக் கடையிலிருந்து வாங்கப்பட்டுள்ளதும், அந்த கடை, கர்நாடக அதிமுகவை சேர்ந்த முக்கியமான நபரின் கடை என்பது தெரிய வந்தது. அவர்தான் சசிகலாவிற்கு சிறைக்குள் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதும், அதிகாரிகளுக்கு பண பட்டுவாடா செய்துள்ளதும் பிறகு தெரிய வந்துள்ளது.
லீக்
அனைத்து சிசிடிவி வீடியோக்களையும் ஆய்வு செய்த ரூபா அதில் சிலவற்றை தனது செல்போனிலும் ரெக்கார்டு செய்துள்ளார். அந்த வீடியோக்கள்தான் இப்போது ஒவ்வொன்றாக லீக்காகிவருகின்றன. அதை லீக் செய்வது யார் என்பதை கர்நாடக உளவுத்துறையினர் ரகசியமாக விசாரித்து வருகிறார்களாம்.