அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செல்லுமா? தேர்தல் ஆணைய முடிவு என்று வெளியாகிறது தெரியுமா?
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது குறித்த இறுதி முடிவை வரும் 20ஆம் தேதிக்குள் அறிவிக்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தொடருவாரா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவை அக்கட்சியின் சட்டவிதிகளை ஆராய்ந்து வரும் 20-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் இறுதி முடிவு அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுப்பட்டது.
இதைத் தொடர்ந்து அதிமுக சட்டவிதிகளின் படி அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால் அந்த நியமனம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் அணியினர் நாடினர்.
61 பக்கங்கள் பதில் மனு
இந்த புகார் மனுவுக்கு பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அளித்ததன் பேரில் சசிகலா பதலளித்தார். அதேபோல் 61 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை ஓபிஎஸ் தரப்பினரும் அளித்தனர்.
உண்மையான அதிமுக
இந்நிலையில் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்பதால் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து வலியுறுத்தினர்.
20-க்குள் முடிவு
மேலும் அதிமுக பொதுச் செ்யலாளராக சசிகலாவின் நியமனத்தையும் செல்லாது என்று அறிவிக்கவும் வலியுறுத்தினர். இந்த நியமனம் விவகாரம் குறித்து வரும் 20-ஆம் தேதிக்குள் முடிவெடுக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்கட்சி சட்டங்கள் ஆய்வு
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கையில், அதிமுக பொதுச் செயலாளர் நியமனம் தொடர்பாக சசிகலா தரப்பு, ஓபிஎஸ் தரப்பு மனுக்களை பரிசீலனை செய்து வருகிறோம். அதிமுவின் உள்கட்சி சட்டத்திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு அந்த நியமனம் செல்லுமா செல்லாதா என்பது குறித்து மார்ச் 20-ஆம் தேதிக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கியத்துவம் வாய்ந்தது
ஏப்ரல் 12-ஆம் தேதி அன்று ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் என்ற போட்டி நடந்து வருவதால் தேர்தல் ஆணையத்தின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் பதிலின் மூலம் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதும் தெரியவரும்.