சொத்துக் குவிப்பு வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் சசிகலா மறு சீராய்வு மனு !
சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்ய கோரி சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை மறுசீராய்வு செய்யக்கோரி சசிகலா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பிப்ரவரி 14-ந் தேதி தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பில் ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் வழக்கில் இருந்து அவர் விலக்கப்படுவதாக நீதிபதிகள் கூறினார்கள். அவர் இறந்துவிட்டதால் அவரை குற்றவாளி என பிரகடனம் செய்து சிறை தண்டனை விதிக்க முடியாது எனவும் கூறினர்.
அதே நேரத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கான 4 ஆண்டுகால சிறை தண்டனையைும், அத்துடன் தலா ரூ.10 கோடி அபராதமும் செலுத்த வேண்டும் என்பதை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். இதையடுத்து சசிகலா உள்ளிட்டோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே கர்நாடகா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மேல்முறையீட்டு வழக்கு முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பின்னர்தான் ஜெயலலிதா மறைந்தார். ஆகையால் அவரையும் குற்றவாளி என பிரகடனம் செய்து அவருக்கு கீழ்நீதிமன்றம் விதித்திருந்த ரூ100 கோடி அபராதத்தை வசூலிப்பது குறித்து உத்தரவிட வேண்டும்; அதற்காக பிப்ரவரி 14-ந் தேதி அளித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் பெஞ்ச், கர்நாடகா அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
90 நாட்களில் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என்ற அடிப்படையில் இந்த மனுவை சசிகலா வழக்கறிஞர் செந்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது போன்று தமக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என சசிகலா கோரியுள்ளார். இந்த மனு ஓரிரு வாரத்திற்குள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் கர்நாடக அரசு சார்பில் இந்த மனுவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த மனுவை தள்ளுபடி செய்வதற்கே அதிகப்படியான வாய்ப்பு இருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளனர் சட்ட நிபுணர்கள்.