இரட்டை இலை எங்களுக்கே.. தலைமைத் தேர்தல் ஆணையருடன் சசி அதிமுகவினர் இன்று சந்திப்பு
இரட்டை இலை சின்னம், அதிமுக பொதுச் செயலாளர் நியமனம் விவகாரம் ஆகியவற்றில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சசிகலா தரப்பைச் சேர்ந்த அணியினர் இன்று சந்திக்கின்றனர்.
டெல்லி: இரட்டை இலை சின்னம், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் தங்கள் தரப்பு கருத்துகளை எடுத்துக் கூறுவதற்காக தலைமை தேர்தல் ஆணையரை தம்பிதுரை தலைமையில் இன்று காலை 11.30 மணிக்கு சந்திக்கின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவின் நியமனம் அதிமுகவின் சட்ட விதிகளுக்கு மாறானது என்றும் அதை செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் ஏற்கெனவே தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பினர்.
அதற்கு விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு சசிகலா தரப்பினர் பதில் அளித்துவிட்டனர். பின்னர் 61 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை ஓபிஎஸ் தரப்பினரும் தாக்கல் செய்தனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தாங்களே உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு தங்களுக்கே முழு அதிகாரம் உள்ளது என்றும் அதிமுகவின் சட்டவிதிகளுக்கு மாறாக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவின் நியமனம் செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியினர் நேற்று தலைமைத் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்தனர்.
இந்நிலையில் அதிமுகவின் சட்டவிதிகளை ஆராய்ந்து வரும் 20-ஆம் தேதிக்குள் சசிகலா நியமனம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் நியமனம், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தங்கள் தரப்பில் விளக்கம் அளிக்க லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையிலான சசிகலா அணியினர் இன்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்திக்கின்றனர்.