சசிகலாவுக்கு ஃபேன், கட்டில் ஓகே... வீட்டு சாப்பாடுக்கு நோ சொன்ன சிறைத்துறை டிஜிபி
பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசிக்கு டிவி, கட்டில், மெத்தை, மின் விசிறி, நாற்காலி, மேஜை வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஜிபி கூறியுள்ளார்.
பெங்களூரு : வயது உடல்நிலையை காரணம் காட்டி சில வசதிகளை சசிகலா, இளவரசி கேட்டார்கள், நாங்கள் டிவி, கட்டில், மெத்தை, மேஜை நாற்காலி கொடுத்துள்ளோம் என்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா ராவ் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட அப்பீல் வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 14ஆம் தேதி தீர்ப்பளித்தது.
முதல்வர் கனவில் இருந்த சசிகலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறை சென்றார். சசிகலா உடன் இளவரசி, சுதாகாரன் ஆகியோரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் மகளிர் பிளாக்கில் 2வது அறையில் கடந்த 15ஆம் தேதி அடைக்கப்பட்டனர்.
முதல்வகுப்பு கேட்ட சசிகலா
சசிகலா தரப்பில் முதல் வகுப்பு அறை, ஹீட்டர், வெஸ்டன் டாய்லெட், ஏசி ரூம் உள்ளிட்ட வசதிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்க நீதிபதி அஸ்வத் நாராயணா மறுத்துவிட்டார். இதனையடுத்து வசதிகளற்ற சாதாரண சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.
தட்டு, செம்பு, தலையணை
மூவருக்கும் தலா 2 தட்டுகள், 2 சொம்புகள், தலையணை, படுக்கை விரிப்பு, போர்வை, சோப்பு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
சிறை உணவுகள்
சிறையில் வழங்கப்பட்ட சப்பாத்தி, சாம்பார், புளியோதரை, களி ஆகிய உணவுகள் மட்டுமே சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் வழங்கப்பட்டது. இதனால் முதல்நாளில் தூங்காமல் தவித்தாரம் சசிகலா.
வசதிகள் கேட்ட வக்கீல்கள்
கடந்த 16ஆம் தேதி சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவரும் ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக வருமான வரி செலுத்துகின்றனர். எனவே இருவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, முதல் வகுப்புக்கு உரிய வசதிகளை வழங்க வேண்டும் என சசிகலாவின் வழக்கறிஞர்கள், கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணராவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கட்டில், மெத்தை, டிவி
இதனைப் பரிசீலித்த டிஜிபி சத்தியநாராயண ராவ், சசிகலா, இளவரசிக்கு டிவி, கட்டில், மெத்தை, மின் விசிறி, நாற்காலி, மேஜை, 2 செய்தித் தாள்கள் ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்தார்.
வீட்டு சாப்பாடுக்கு நோ
பாதுகாப்பு காரணங்களினால் வீட்டு சாப்பாடு, வெளியில் இருந்து மருந்து ஆகிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் கூறியுள்ளார்.
வசதிகள் கேட்காத சுதாகரன்
ஆண்கள் சிறையில் மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ள சுதாகரன் தனக்கு எந்த வசதியும் வேண்டும் என்று கேட்கவில்லை. எனவே அவருக்கு புதிய சலுகையோ, வசதியோ செய்து தரப்படவில்லை என்றும் டிஜிபி கூறியுள்ளார்.
ஜெ., வுக்கு ஓகே, சசிக்கு நோ
கடந்த 2014ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்த போது அவருக்கு வீட்டு உணவுகள், வெளியில் இருந்து மாத்திரைகள் வழங்க சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. அதேபோல தனக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சசிகலா, ஆனால் சிறை நிர்வாகம் ஸ்டிரிக்ட்ஆக நோ சொல்லி விட்டது.