மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.50 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு.. ரூபாவுக்கு சக அதிகாரி வக்கீல் நோட்டீஸ்
பெங்களூர்: 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.50 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ், சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு சத்யநாராயணராவ் சலுகை காட்டியதாக ரூபா புகார் கூறி பரபரப்பு கிளப்பியிருந்தார்.
இதையடுத்து, முதல்வர் உத்தரவின்பேரில், குற்றச்சாட்டு பற்றி உயர்மட்ட குழு விசாரணை நடத்த தொடங்கியுள்ளது. ரூபா வேறு பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டார். சத்யநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு சத்யநாராயணராவ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுபற்றி, 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.50 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆதாரமில்லாமல் தனது கட்சிக்காரர் சத்யநாராயணராவ் மீது குற்றம்சாட்டியுள்ளதாக ரூபா மீது வக்கீல் நோட்டீசில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.