முரண்டு பிடிக்கும் "அம்மா" அரசு... தொடர்கிறது "சத்திய" சோதனை!
சென்னை: ஐபிஎஸ் அதிகாரி சத்தியப்பிரியாவை பணியில் சேர்க்குமாறு மத்திய நிர்வாக டிரிப்யூனல் உத்தரவிட்டும் கூட அவரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யாமல் தமிழக அரசு தொடர்ந்து முரண்டு பிடித்து வருவது தமிழக அதிகாரிகள் மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15 மாதமாக தமிழக அரசின் பழிவாங்கல் நடவடிக்கையால் பணியில் இல்லாமல் தவித்து வருகிறார் நேர்மையான அதிகாரியாக கூறப்படும் சத்தியப்பிரியா.
2010ஆம் ஆண்டு மாநில அரசின் மூலமாக தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி சத்யபிரியா, சூடான் ஐ.நா. அமைதிப் படையில் சேர விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பான ஐ.நா. அமைதிப் படை தேர்வில் 2010-11ஆம் ஆண்டு அவர் தேர்ச்சியும் பெற்றார். இதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு சூடானுக்கான ஐ.நா. அமைதிப் படையில் சேருவதற்கு உள்துறை அமைச்சகம் சத்யபிரியாவுக்கு அழைப்பு அனுப்பியது.
இதற்கு தமிழக காவல்துறை அனுமதி அளித்தது. ஆனால் தமிழக அரசு ஒப்புதல் கொடுக்கவில்லை. இருப்பினும் மத்திய உள்துறை அமைச்சக அழைப்பை ஏற்று சூடானுக்கான ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்ற 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி புறப்பட்டுச் சென்றார் சத்யபிரியா. அவர் அங்கு பணி முடித்த பின்னர் கடந்த மார்ச் மாதம் தமிழகம் திரும்பினார்.
ஆனால் தமிழக அரசோ, உரிய ஒப்புதல் இல்லாமல் வெளிநாடு சென்றதாகக் கூறி சத்யபிரியாவை சஸ்பென்ட் செய்தது. இது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் சத்யபிரியா முறையீடு செய்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய உள்துறை அமைச்சகம், கடந்த ஆண்டு அக்டோபர் 28-ந் தேதி தமிழக உள்துறை செயலர் அபூர்வ வர்மா உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவை அனுப்பி வைத்தது. அதில், சத்யபிரியா சஸ்பென்ட் செய்யப்பட்டது சரியான நடவடிக்கை அல்ல. அவர் மீதான சஸ்பென்ட் நடவடிக்கையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய நிர்வாக டிரிப்யூனலும் சத்தியப்பிரியாவை பணியில் நியமிக்க உத்தரவிட்டது. இருப்பினும் தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. சஸ்பெண்ட் உத்தரவையும் ரத்து செய்யாமல் உள்ளது.
டிஜிபி உத்தரவை அவர் மதிக்கவில்லை என்ற சப்பைக் காரணத்தை மட்டுமே தொடர்ந்து கூறி வருகிறது. இதன் காரணமாக எஸ்.பி. அந்தஸ்திலான அதிகாரியான சத்தியப்பிரியா பணியில் சேர முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளார்.
நேர்மையான அதிகாரிகளை போட்டுப் பார்ப்பது அரசியல்வாதிகளின் Custom என்றால் கஷ்டம் எல்லாம் மக்களுக்குத்தான்!