சிறார் சட்ட திருத்த மசோத நிறைவேற்றம் திருப்தி அளிக்கிறது: நிர்பயாவின் தாயார் பேட்டி
டெல்லி: சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பில் மாற்றம் செய்ய வகை செய்யும் சிறார் நீதிச் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது திருப்தி அளிப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில் சிறார் குற்றவாளி ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இளம் குற்றவாளியின் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில், சிறார் நீதிச் சட்டத்திருத்த (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து அவசரமாக சிறார் நீதிச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது. ஏற்கனவே இந்த சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று இச்சட்ட மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விவாதத்திற்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. குரல் வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக பெருவாரியான வாக்குகள் கிடைத்ததால் மசோதா நிறைவேறியது.
இதுகுறித்து உயிரிழந்த மாணவி நிர்பயாவின் (உண்மையான பெயர் ஜோதிசிங்) தாயார் கூறுகையில், சட்டம் நிறைவேற்றப்பட்டது திருப்தியளிக்கிறது. ஆனால், என் மகளுக்கு நீதி கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார்.
நிர்பயாவின் தந்தை கூறும்போது, சிறார் நீதிச் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது என் மகளுக்கான அஞ்சலி என்று கூறியுள்ளார்.