பீகார் வெள்ளத்தில் காலியான ரூ. 260 கோடி...எலியைச் சொல்லக் கூடாது...எதிர்க்கட்சிகள் கிண்டல்!!
கோபால்கஞ்ச்: பீகாரில் கடந்த மாதம் ரூ. 260 கோடி செலவில் கட்டப்பட்டு முதல்வர் நிதீஷ் குமாரால் திறந்து வைக்கபப்ட்ட பாலத்தின் ஒரு பகுதி கனத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பாட்னாவில் இருந்து 150 கி. மீட்டர் தொலைவில் இருக்கும் கோபால்கஞ்சில் கந்தக் ஆறு உள்ளது. இதன்மீது சத்தர்காட் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் ஒரு பகுதிதான் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகளான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளன.
அந்தப் பதிவில் கடந்த மாதம் ரூ. 260 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். இதை மாநில அரசு மறுத்ததுடன், போலி வீடியோ என்றும் கூறியுள்ளது. பாலம் உடையவில்லை, அதில் இருந்து இரண்டு கி. மீட்டர் தொலைவில் இருக்கும் ரிங் ரோடுதான் உடைந்துள்ளது, பாலத்துடன் இந்த ரோட்டுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், எதனால் உடைப்பு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் அமைச்சர் நந்த் கிஷோர் கூறியுள்ளனர்.
ரோட்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும் பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் வலுவானதாக இல்லாததால், வெள்ள நீரின் அழுத்தத்தால் உடைப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடியிடமிருந்து திடீரென ஒரு தமிழ் ட்வீட்.. திருக்குறள் பற்றி புகழாரம்
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டர் பதிவில், ''நிதீஷ் குமார் ஆட்சியில் பாலங்கள் அடித்துச் செல்லப்படுவது ஒன்றும் புதிது இல்லை. தேர்தலுக்கு முன்பு பெயர் வாங்குவதற்கு பாலத்தை திறந்து வைத்தார். பாலத்தை கட்டிய நிறுவனத்தை கருப்பு பட்டியலில் மாநில அரசு சேர்க்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
மாநில காங்கிரஸ் தலைவர் மதன் மோகன் ஜா தனது ட்விட்டர் பதிவில், ''ரூ. 263.47 கோடி செலவில் பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 16ஆம் தேதிதான் திறந்து வைக்கப்பட்டது. அதற்குள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதற்கும் எலியை காரணமாக கூறக் கூடாது'' என்று பதிவிட்டுள்ளார்.