சத்யம் ராமலிங்க ராஜூவுக்கு ஜாமீன்! தண்டனையும் நிறுத்தி வைப்பு!!
ஹைதராபாத்: ரூ7 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கு ஹைதராபாத் மாநகர அமர்வு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. மேலும் அவர்கள் 10 பேருக்கும் வழங்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் ரூ.7,000 கோடி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி ராமலிங்க ராஜூ, அவரது சகோதரர் ராம ராஜு உட்பட 10 பேர் மீது மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 10 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கடந்த மாதம் 9-ந் தேதி தீர்ப்பளித்தார். மேலும் ராமலிங்க ராஜுவுக்கும், அவரது சகோதரருக்கும் ரூ.5.35 கோடி அபராதமும், மற்ற 9 பேருக்கு தலா ரூ.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 11 பேரும் ஹைரதராபாதின் செர்லபள்ளி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இத் தீர்ப்பை எதிர்த்து மாநகர அமர்வு நீதிமன்றத்தில் 11 பேரும் கடந்த வாரம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் விசாரணைக் காலத்திலேயே, 35 மாதங்களை சிறையில் கழித்துள்ளனர். மேலும் சத்யம் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளும், சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதால் அபராதம் கட்ட முடியாது என்றனர்.
இதையடுத்து நீதிபதி எம்.லட்சுமண், ராமலிங்க ராஜுவுக்கும், அவரது சகோதரருக்கும் தலா ரூ.1 லட்சம் பிணைத் தொகையுடனும், மற்ற 9 பேருக்கு தலா ரூ.25,000 ஆயிரம் பிணைத் தொகையுடனும் ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்றார்.