போலீசார் முகத்தில் காறி உமிழ்ந்த சவுதி தூதர் வீட்டுப் பெண்கள்- அதிர்ச்சியில் அதிகாரிகள்!
டெல்லி: டெல்லியில் நேபாள பெண்களை அடைத்து வைத்திருந்த சவுதி அரேபிய தூதரக அதிகாரியின் வீட்டிற்கு அப்பெண்களை மீட்கச் சென்ற அதிகாரிகளை முகத்தில் உமிழ்ந்து அத்தூதரக அதிகாரி வீட்டுப் பெண்கள் அவமானப் படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு வேலைக்காக அழைத்த வந்து அத்தூதரக அதிகாரி பலாத்காரம் செய்த நேபாள பெண்களை மீட்பதற்காக சவுதி அரேபிய தூதரக அதிகாரியின் வீட்டுக்கு கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பெண் போலீசார் உள்பட 40 போலீசார் சென்றனர்.
அப்போது, தங்கள் வாழ்நாளில் காணாத அவமானங்களை எல்லாம் சந்திக்கப் போகிறோம் என்று அவர்களுக்கு தெரியாது. தூதரக அதிகாரியின் குடும்ப பெண்கள் முதலில் வீட்டு கதவையே திறக்க மறுத்து விட்டனர். சிறிது நேரம் கழித்து திறந்தபோதிலும் போலீசாரை உள்ளே விட மறுத்தனர். பிடித்து தள்ளினர்.
போலீசார் மீது காறி உமிழ்ந்தனர். காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு திட்டினர். கன்னத்திலும் அறைந்தனர். அவர்கள் போதாது என்று அதே கட்டிடத்தில் குடியிருக்கும் சவுதி அரேபிய வாசிகள் 2 பேரும் சேர்ந்து கொண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு வழியாக போலீசார் அப்பெண்களை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் 2 மணி நேரம் நீடித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். "நான் கண்ணால் கண்டதை என்னாலேயே நம்ப முடியவில்லை" என்று ஒருவர் கூறினார். அடிபட்ட போலீசாரில் சமீபத்தில் வேலைக்கு சேர்ந்த ஒரு பெண் போலீசும் அடங்குவார். அவர், "இதுதான் எனக்கு மோசமான நாள்" என்று தெரிவித்தார். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.