லோக்சபா தேர்தலில் சவுரவ் கங்குலிக்கு சீட் பா.ஜ.க முடிவு
லோக்சபா தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என்று அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சவுரவ் கங்குலிக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்க பா.ஜனதா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்வது பற்றி முடிவு செய்யவில்லை என்று கங்குலி கூறியுள்ளார். எனக்கு வாய்ப்பு வந்துள்ளது. அதுபற்றி பின்னர் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
மேற்குவங்க மாநில பாரதீய ஜனதா தேர்தல் பார்வையாளர் வருண் காந்தியை கடந்த மாதம் கங்குலி சந்தித்து பேசினார். இதையடுத்தே கங்குலிக்கு சீட் வழங்குவது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மாநிலங்களவை நியமன எம்.பி.யாக காங்கிரஸ் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டார். அவருக்கு பாரதரத்னா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சவுரவ் கங்குலியை களமிறக்க முடிவு செய்துள்ளது பாஜக என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
மேலும் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் அதிக எம்.பி சீட்களை கைப்பற்றியுள்ளது. பாஜகவிற்கு டார்ஜிலிங் பகுதியில் மட்டுமே செல்வாக்கு உள்ளது. எனவே பிரபலமான நபரை களமிறக்க முடிவு செய்து சவுரவ் கங்குலிக்கு சீட் தர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.