சேவிங்ஸ் அக்கவுண்ட் இருந்தால் பிப்.1 முதல் ஏடிஎம்மில் ஒரே நாளில் ரூ. 24,000 ரூபாய் எடுக்கலாமாம்
சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஏடிஎம்களில் ஒரே முறையில் 24000 ரூபாய் வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
டெல்லி: சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. அதன்படி ஏடிஎம்மில் எடுக்கப்படும் தொகை 10,000 ரூபாயில் இருந்து 24000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பு ரத்து நடவடிக்கையை அறிவித்தார். இதையடுத்து நாட்டில் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.
கறுப்புப்பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பணம் எடுக்க பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் கணக்கில் பணமிருந்தும் அதனை எடுத்து செலவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
நேற்று கரண்ட் அக்கவுண்ட்
இந்நிலையில் கரண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நேற்று நீக்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஏடிஎம்களில் அவர்கள் வரம்பின்றி பணம் எடுக்கலாம் என்றும் ஆர்பிஐ அறிவித்தது.
இன்று சேமிப்பு கணக்கு
இதைத்தொடர்ந்து இன்று சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்ககி தளர்த்தியுள்ளது. அதன்படி சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம்களில் எடுக்கும் பணத்தின் உச்சவரம்பு 10000 ரூபாயிலிருந்து 24 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் ரூ.24000
ஒரே நாளில் 24000 ரூபாய் எடுக்கலாம் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதுவரை ஒரு நாளைக்கு அதிகளவாக 10000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டது.
ஒரு வாரத்துக்கான வரம்பில் மாற்றமில்லை
அதே நேரத்தில் ஒரு வாரத்துக்கு அதிகளவாக 24000 ரூபாய் வரை தான் எடுக்க முடியும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஒரு வாரத்துக்கான உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும்
சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தொடரும் கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. அதற்கான பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதிக சொத்துக்களை கொண்டுள்ளவர்களுக்கு சலுகை
மேலும் வங்கிகள் தங்களின் அதிக பரிவர்த்தனை செய்யும் தனிநபர் வாடிக்கையாளர்களுக்கான உச்சவரம்பை 25000ரூபாய் வரை உயர்த்தலாம் என தெரிவித்துள்ளது. இததனை உயர்ந்த சொத்து மதிப்பை கொண்டுள்ள தனி நபர்களுக்கு மட்டும் வங்கிகள் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்வு
நாடாளுமன்றத்தில் நாளை பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.