இந்திய தேர்தல் ஆணைய துணை ஆணையராக சந்தீப் சக்சேனா நியமனம் -தமிழகத்துக்கு விரைவில் புதிய தலைமை அதிகாரி
டெல்லி: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சந்தீப் சக்சேனா, இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் சக்சேனா 1989-ம் ஆண்டு தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியில் சேர்ந்தார். 2011-ம் ஆண்டு வேளாண்மைத்துறை முதன்மை செயலாளராக பணியாற்றினார்.
கடந்த ஆண்டு அவரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக மத்திய தலைமை தேர்தல் ஆணையம் நியமித்தது. ஸ்ரீரங்கம், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்களின்போது சந்தீப் சக்சேனாவின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் புகார்கள் எழுப்பியிருந்தன.
மேலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதனிடையே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து சந்தீப் சக்சேனா விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.