மல்லையா லண்டன் செல்வது அரசுக்கும், எஸ்பிஐக்கும் முன்பே தெரியும்.. மூத்த வழக்கறிஞர் புதிய குண்டு
விஜய் மல்லையா லண்டன் செல்வதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே அந்த விஷயம் மத்திய பாஜக அரசுக்கும், ஸ்டேட் பேங்க் வங்கிக்கும் தெரியும் என்று மூத்த வழக்கறிஞர் , துஷ்யந்த் தாவே தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: விஜய் மல்லையா லண்டன் செல்வதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே அந்த விஷயம் மத்திய பாஜக அரசுக்கும், ஸ்டேட் பேங்க் வங்கிக்கும் தெரியும் என்று மூத்த வழக்கறிஞர், துஷ்யந்த் தாவே தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றுள்ளார்.
விஜய் மல்லையா பிரச்சனை தற்போது மத்திய அரசுக்கு தலைவலியாக மாறியுள்ளது. விஜய் மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறும் முன் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை பார்த்ததாக கூறியுள்ளார். இது அந்த கட்சிக்கு சிக்கலாகி உள்ளது.
கிங் பிஷர் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள 19க்கும் அதிகமான வங்கிகளில் மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்தார். இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
அதிக கடன்
மல்லையாவிடம் 17க்கும் அதிகமான வங்கிகள் கடன் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இதில் மிகவும் அதிக கடன் கொடுத்தது, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாதான். கிட்டத்தட்ட 65 சதவிகித கடனை அளித்தது இவர்கள்தான். இந்த வங்கியில்தான் மல்லையாவிற்கு வாராக்கடன் அதிகம் உள்ளது.
வங்கியிடம் தெரிவித்தார்
2016 மார்ச் 3ம் தேதி, மல்லையா நாட்டைவிட்டு தப்பித்து ஓடினார். ஆனால் பிப்ரவரி 28ம் தேதியே இந்த விஷயம் பலருக்கு தெரிந்துள்ளது. இதனால், உச்ச நீதிமன்ற மூத்த வக்கீல், துஷ்யந்த் தாவே எஸ்பிஐ வங்கி இயக்குனரையும், அதிகாரிகளையும், மத்திய அரசின் அதிகாரிகளையும் அணுகி மல்லையா வெளிநாடு செல்ல உள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதை தடுக்கும்படியும் கூறியுள்ளார்.
யாரும் வரவில்லை
அதேபோல் மறுநாள், நான் உங்களுக்காக வழக்கில் ஆஜராகிறேன், நீங்கள் வழக்கு தொடுங்கள் என்றுள்ளார். அதற்கு எஸ்பிஐ அதிகாரிகள் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மறுநாள் நீதிமன்றம் பக்கமே வரவில்லை. இவர் அழைத்தும் அதன்பின் யாரும் போன் எடுக்கவில்லை என்றுள்ளார். இந்த விஷயம் மத்திய அரசுக்கும் தெரியும் என்றும் துஷ்யந்த் தாவே கூறியுள்ளார்.
நடவடிக்கை இல்லை
இந்த நிலையில்தான் சரியாக நான்கு நாட்கள் கழித்து மல்லையா லண்டன் பறந்தார். அப்போதே தான் சொன்னதை கேட்டு இருந்தால் மல்லையா தப்பித்து இருக்க மாட்டார் என்று இவர் கூறியுள்ளார். நிதி அமைச்சரை மல்லையா சந்தித்தார் என்ற பிரச்னையை தொடர்ந்து தற்போது இந்த பிரச்சனையும் மத்திய அரசுக்கு நெருக்கடி அளித்துள்ளது.