கணக்கில் வைக்கவே பணம் இல்லாதவர்களிடம் இருந்து ரூ.1,771 கோடி வசூல்... எஸ்பிஐயின் அடடே அபராதம்!
வங்கிக் கணக்கில் போதிய இருப்புத் தொகை வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து எஸ்பிஐ ரூ.1,771 கோடி வசூல் செய்துள்ளது.
டெல்லி : வங்கிக் கணக்கில் போதிய பணம்இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆயிரத்து 771 கோடி அபராதமாக வசூலித்துள்ளது.
2017ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் வங்கிக் கணக்கில் போதிய அளவு பணம் இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.1,771 கோடியே 77 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் காலாண்டு வருமானமானத்தை விட அதிகமாகும்.
எஸ்பிஐயின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு வருமானம் என்பது ரூ. 1,581 கோடி தான், ஆனால் அதை விட அதிக அளவு அபராதமாகவே வசூலிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 2017/18ம் நிதியாண்டில் மட்டுமே ரூ. 1771.77 கோடி அபராம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை இணையமைச்சர் சிவ்பிரதாப் சுக்லா மக்களவையில் தெரிவித்துள்ளார்.
போதிய இருப்புத்தொகை இல்லாவிட்டால் அபராதம்
2016-17 நிதியாண்டில் வங்கிக் கணக்கில் பணம் பராமரிக்காதவர்களிடம் எஸ்பிஐ எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. ஆனால் 2017-18ம் நிதியாண்டில் இந்த புதிய நடைமுறையை எஸ்பிஐ கொண்டு வந்தது.
இந்தியாவின் முன்னணி வங்கி
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு நாடு முழுவதும் 42 கோடி வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். இவற்றில் 13 கோடி பேர் அடிப்படை வங்கி சேமிப்பு கணக்கு மற்றும் பிரதமரின் யோஜனா திட்டத்திற்காக கணக்கு தொடங்கியவர்கள். இந்த 13 கோடி மக்களுக்கு மட்டுமே அபராதம் வசூலிப்பில் இருந்து விலக்கு உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியும் அதிக வசூல்
இதே போன்று பஞ்சாக் நேஷனல் வங்கியும் 2017 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் 97.34 கோடி அபராதம் வசூலித்துள்ளது. இதுவே இந்த வங்கி வசூலித்த அதிக அபராதத் தொகை.
பணமே இல்லை அப்புறம் ஏன் அபராதம்?
வங்கிக் கணக்கில் போதுமான வைப்புத் தொகை கூட வைக்க முடியாத வாடிக்கையாளர்களிடம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக வசூலித்துள்ளது கடும் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது. பணமே வைத்திருக்க முடியாதவர்களிடம் இருந்தா அபராதம் வசூலிப்பது என்று பலரும் இந்த செய்தியை கேட்டு சமூக வலைதளங்களில் கொந்தளிக்கின்றனர்.