2.5 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்துள்ளதா ஆர்பிஐ.. பரபரக்கும் சர்ச்சை!
2.5 லட்சம் கோடி மதிப்புள்ள 2ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ பதுக்கியுள்ளதாக எஸ்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை: பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு ஆர்பிஐ சுமார் 15.7லட்சம் கோடி மதிப்புள்ள 2000 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அடிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சமீபகாலமாக நாடு முழுவதும் 2ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் தட்டுப்பாடு நிலவி வருவதாக எஸ்பிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதற்கு பதிலாக புதிதாக அடிக்கப்பட்ட 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் புழங்க ஆரம்பித்துள்ளது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆர்பிஐ-யிடம் விளக்கம் கேட்கப்பட்டும் முறையான விளக்கம் கிடைக்காததால் இவ்விவகாரம் தற்போது வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பான உண்மை நிலையை வெளிகொண்டு வரும் நோக்கோடு இந்த அறிக்கையை தயார் செய்துள்ளதாக எஸ்பிஐ வங்கியின் பொருளாதார ஆலோசகர் சௌமியா கோஷ் தெரிவித்துள்ளார்.
ரூ.2000 நோட்டு பிறந்தகதை
கடந்த ஆண்டு இறுதியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கிய நிலையில், புதிதாக 2000ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. ஆரம்பத்தில் சில ஆயிரங்களில் மட்டும் அடிக்கப்பட்ட ரூ.2000நோட்டுக்கள் அதன் பின் லட்சக்கணக்கில் அடிக்கப்பட்டு நாடு முழுவதும் வினியோகம் செய்யப்பட்டது.
கட்டுக்கட்டுகளாக பிடிப்பட்ட ரூ.2000
ஒருபுறம் சாமானியர்கள் ஏடிஎம் வாசலில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற காத்திருந்த வேளையில், நாடு முழுவதும் பல முக்கிய பிரமுகர்கள் வீட்டில் கோடிக்கணக்கில் ரூ.2000நோட்டுகள் ரெய்டின் மூலமாக பறிமுதல் செய்யப்பட்டன. புதிய ரூ.2000 நோட்டுகளால் சில்லறை தட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, புதிய ரூ.200, ரூ.50 மற்றும் ரூ.20நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.
ரூ.2000 நோட்டு தட்டுப்பாடு
நாட்டில் சமீபகாலமாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்து மூலமாக பதிலளித்த ஆர்பிஐ, மொத்தம் 15.7 லட்சம் கோடி மதிப்புள்ள 2000 மற்றும் 500 ரூபாய் புதிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதாக தெரிவித்தது. அதில் 13.3லட்சம் கோடி நோட்டுகள் நாடு முழுவதும் வினியோகிக்கப்பட்டது.
பணத்தை பதுக்கியதா ஆர்பிஐ
ரூ.2000 நோட்டுகளின் வரத்து குறைந்தது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட எஸ்.பி.ஐ., இந்த தட்டுப்பாட்டிற்கு இரண்டே காரணங்கள் தான் இருப்பதாக கூறியது. அதில் ஒன்று, ரூ.2000 நோட்டை அச்சடிப்பதை ஆர்பிஐ நிறுத்தி இருக்க வேண்டும், அல்லது வினியோகிக்கப்பட்டது போக எஞ்சிய இரண்டரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2ஆயிரம் மற்றும் 500ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ பதுக்கி இருக்க வேண்டும்.
அரசியல்வாதிகள் பதுக்கலா?
இந்நிலையில் ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கும் பணியை ஆர்பிஐ நிறுத்தி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய நோட்டுகள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டாலும், ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் முறையாக கணக்கில் வரவில்லை என எஸ்பிஐ வங்கி குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆர்பிஐ முறைகேடாக அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு ரூ.2000நோட்டுகளை வினியோகம் செய்துள்ளதா என்ற சந்தேகமும் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.