வாடிக்கையாளர்கள் எதிர்ப்புக்கு பணிந்தது எஸ்.பி.ஐ வங்கி.. அபராத தொகை 75% அளவுக்கு அதிரடி குறைப்பு
டெல்லி: வங்கி சேமிப்பு கணக்கில் சராசரி தொகைக்கு குறைவாக சேமிப்பை பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை 75 சதவீதம் அளவுக்கு குறைத்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ).
எஸ்.பி.ஐ வங்கி சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச சேமிப்பு தொகை சராசரியை பராமரிக்காவிட்டால் அதிகமான அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஒருபக்கம், பல ஆயிரம் கோடிகளை வாங்கிவிட்டு, வங்கிகளை ஏமாற்றிவிட்டு தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடிய நிலையில், வாடிக்கையாளர்கள் அதிகபட்ச அபராத தொகையால் அதிருப்தியடைந்தனர்.
அபராதம் குறைப்பு
இதுகுறித்த குமுறல்கள் அதிகரித்த நிலையில், அபராத தொகையை எஸ்.பி.ஐ வங்கி குறைத்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், மெட்ரோ நகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களிலுள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு விதிக்ககப்பட்ட ரூ.50 மற்றும் ஜிஎஸ்டி வரியுடன் சேர்ந்த அபராத தொகை ரூ.15ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி தனியாகும்.
சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள்
இதேபோல சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலுள்ள எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு இதுவரை விதிக்கப்பட்ட அபராதம் ரூ.40லிருந்து முறையே, ரூ.12ஆகவும், ரூ.10 ஆகவும், குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி தனியாகும். ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய அபராத நடைமுறை அமலுக்கு வருகிறது.
வாடிக்கையாளர்கள் குமுறல்
வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளோம். வாடிக்கையாளர்களுக்கே முன்னுரிமை என்பதே எங்கள் வங்கியின் கொள்கை. வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில், எடுக்கப்படும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய வங்கி
எஸ்.பி.ஐ வங்கியில் 41 கோடி சேமிப்பு கணக்குகள் உள்ளன. இதில் 16 கோடி வங்கி கணக்குகள், பிரதமரின் ஜன்தன் திட்டத்தின்கீழ் புதிதாக உருவாக்கப்பட்டது. முதியோர், சிறுவர்கள், சமூக பாதுகாப்பு திட்டங்களால் பலனடைவோர் உள்ளிட்டோருக்காக பிஎஸ்பிடி என்ற சேமிப்பு கணக்கு திட்டத்தை எஸ்.பி.ஐ செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.