புத்தாண்டு பரிசு.. கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது எஸ்.பி.ஐ வங்கி
தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடனுக்கான வட்டிவிகிதத்தை குறைத்து அறிவித்து உள்ளது எஸ்.பி.ஐ வங்கி
டெல்லி : கடன் வாங்குவோருக்கான வட்டி விகிதத்தை குறைத்து தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசை அறிவித்து உள்ளது எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம்.
தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்து உள்ளது எஸ்.பி.ஐ வங்கி. இதுவரை 8.95% இருந்த வட்டி விகிதம் 8.65% ஆக குறைத்து அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றில் இருந்து இந்த வட்டிக்குறைப்பு விகிதம் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வீடு கட்ட கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து உள்ள நிலையில் இந்த வட்டிக்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதன் மூலம் பலர் தங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றிக்கொள்ள முடியும் அதே சமயம் வங்கிக்கும் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்றும் வங்கி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வங்கியின் சில்லறை மற்றும் இணைய வங்கி சேவைப்பிரிவுக்கான நிர்வாக இயக்குநர் பி.கே.குப்தா கூறுகையில், எங்களின் நேர்மையான வங்கி வாடிக்கையாளர்கள் நாங்கள் கொடுக்கும் புத்தாண்டு பரிசு இது. இதனால் பல லட்சம் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள். வட்டிக்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள அரசு விடுத்த அழைப்பின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்து உள்ளார்.
வீடுகளுக்கான கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், வாகனங்களுக்கான கடனுக்கும் வட்டி விகிதம் விரைவில் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடுகையில் எஸ்.பி.ஐ வங்கியில் தான் கடன் வட்டி விகிதம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.