பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை 2018 பிப். 8-க்கு ஒத்திவைப்பு
பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
டெல்லி: அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கை 2019-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதியன்று விசாரிக்க வேண்டும் என சன்னி வக்பு வாரியத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வலியுறுத்தினார். ஆனால் இதை நிராகரித்த உச்சநீதிமன்றம் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணவேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதனிடையே அயோத்திக்கு பதில் லக்னோவில் மசூதி கட்டலாம் என ஷியா தரப்பு யோசனையை முன்வைத்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது சன்னி வக்பு வாரியத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், குறுகிய காலத்தில் 19,000 பக்க ஆவணங்களை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா எப்படி தாக்கல் செய்தார்? தங்களுக்கும் மனுதாரர்களுக்கும் அனைத்து ஆவணங்களையும் தரவும் இல்லை.
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையின் போதெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. ஆகையால் இந்த வழக்கின் விசாரணையை 2019-ம் ஆண்டு ஜூலை 15-க்கு ஒத்திவைக்க வேண்டும் என வாதிட்டார். மேலும் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும் எனவும் கபில் சிபல் உள்ளிட்டோர் வாதிட்டனர்.
இன்றைய விசாரணை குறித்து ஷியா வக்பு வாரியத்தின் தலைவர் வாசிம் ரிஸ்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், லக்னோவில் மசூதி கட்டலாம் என்கிற தங்களது யோசனையை உச்சநீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்திருக்கிறது என்றார். இந்த விசாரணைகளைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.