ரூபாய் நோட்டு தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு
ரூபாய் நோட்டு தொடர்பான வழக்குகளின் விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிரான அனைத்து வழக்குகளின் விசாரணையையும் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் மத்திய அரசின் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
மேலும் அனைத்து வழக்குகளையும் விசாரிக்கவும் தயார் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்குர் தலைமையிலான பெஞ்ச் தெரிவித்தது. இது தொடர்பான இன்று முழுமையான விசாரணை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று அனைத்து வழக்குகள் மீதான விசாரணையும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்றைய விசாரணையின் போது, கிராமப்புற பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர்கள் கபிசிபல், ப சிதம்பரம் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டனர்.
இதையடுத்து கூட்டுறவு வங்கிகள் பாதிக்காத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.