காவிரி நதிநீர் வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் ஜூலை 19-க்கு ஒத்திவைப்பு
டெல்லி: காவிரி நதிநீர் தொடர்பான அனைத்து வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் ஜூலை 19-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்களிடையே காவிரி நதிநீரை பகிர்வதில் பிரச்சனை நீடித்து வந்ததைத் தொடர்ந்து காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு, காவிரி நதியில் இருந்து கிடைக்கும் மொத்த நீர் அளவு 740 டிஎம்சி ஆகும். இதில் கேரளத்துக்கு 30 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, தமிழ்நாட்டுக்கு 419 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என மொத்தம் 726 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்து தீர்ப்பளித்தது.
ஆனால் இந்தத் தீர்ப்பை கர்நாடகா ஒருபோதும் நடைமுறைப்படுத்தியதே இல்லை. இதனிடையே 2013-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டது.
இருப்பினும் கர்நாடகா, தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிடாமல் வஞ்சித்தே வருகிறது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழக அரசு வழக்குகளை தொடர்ந்தது.
காவிரியில் உரிய நீரைத் திறந்துவிடாத கர்நாடகா ரூ2,500 கோடி நட்ட ஈடு தர வேண்டும் என்றும் ஒரு வழக்குப் போட்டது தமிழக அரசு.
இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஷ்வர் தலைமையிலான ஆர்.கே அகர்வார், ஏ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் இன்று விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.செலமேஸ்வர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா அரசின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கின் விசாரணை ஜூலை 19-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அன்றைய தினம் முதல் அனைத்து வழக்குகள் மீது விரிவான விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் கூறினர்.