நில மோசடி வழக்கு: கருணாநிதி மகள் செல்விக்கு மீண்டும் அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: நில மோசடி வழக்கில் திமுக தலைவர் கருணாநிதி மகள் செல்வி பதில் அளிக்க மீண்டும் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த வி.நெடுமாறன் என்பவர் சென்னை காவல்துறையிடம் கடந்த 2012-ம் ஆண்டு ஒரு புகார் அளித்தார். அதில், தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் செல்வியும், அவரது மருமகன் வி.எம்.ஜோதிமணியும், செங்கல்பட்டு அருகே உள்ள தாழம்பூர் கிராமத்தில் தங்களுக்கு சொந்தமான 2.94 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்யப்போவதாக கூறினர். அதற்காக ரூ.3.50 கோடி வரைவோலையாகவும், ரொக்கமாகவும் அளித்தேன். அவர்கள் பத்திரம் பதிவு செய்து தராததால் பணத்தை திருப்பி கேட்டதற்கு என்னை இருவரும் மிரட்டினார்கள் எனக் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வந்தது. ஆனால் செல்வி தரப்போ, சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், மனுதாரர் மிரட்டியதாக கூறிய அன்று நான் சென்னையில் இல்லை. அன்றைய தினம் காலையில் கொல்கத்தாவுக்கு சென்று விட்டு, இரவுதான் சென்னை திரும்பினேன். என் மீதான குற்றச்சாட்டுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை. எனவே, இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்கவேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
இம் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து கருணாநிதி மகள் செல்வியை விடுவித்து கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி உத்தரவிட்டது. ஆனால் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நெடுமாறன் வழக்கு தொடர்ந்தார்.
6 வார கால அவகாசம்
இந்த மேல்முறையீட்டு மனு மீது கடந்த ஏப்ரல் 1-ந் தேதியன்று விசாரணை நடத்தியது உச்சநீதிமன்றம். அப்போது செல்வி 6 வாரங்களுக்குள் விளக்கம் அனுப்புமாறு நோட்டீசு அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கூடுதல் அவகாசம்
இந்த நிலையில் இம் மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.கெஹர் மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த ஜூலை 4-ந் தேதியன்று விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் யோகேஷ் கன்னா ஆஜரானார். உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் செல்விக்கு அனுப்பப்பட்ட விளக்கம் கோரும் நோட்டீஸ் அவருக்கு சேரவில்லை என்று நீதிபதிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேலும் 4 வார கால அவகாசம் அளித்து நோட்டீஸை நேரடியாக செல்வியிடமே ஒப்படைக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மீண்டும் அவகாசம்
இதனைத் தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இந்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது பதில் மனுவைத் தாக்கல் செய்ய செல்வி தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற உச்சநீதிமன்றம் செல்வி தரப்புக்கு மீண்டும் கால அவகாசம் கொடுத்து 6 வார காலத்துக்கு வழக்கை ஒத்திவைத்தது.