உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பலாம்: தூர்தர்ஷனுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!
டெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பலாம் என்று உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தூர்தர்ஷன் ஒளிபரப்ப டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தூர்தர்ஷன் தொலைக்காட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
உச்ச நீதிமன்ற விசாரணையின் போது, தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.
இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப புதிய சேனல் ஒன்றை துவக்க முடியுமா என்று உச்ச நீதிமன்றம் தூர்தர்ஷன் நிர்வாகத்திடம் கேட்டிருந்தது. இதற்கு இன்று பதில் அளித்த தூர்தர்ஷன் நிர்வாகம், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப புதிய சேனல் துவக்க முடியாது என்று கூறியது.
இந்த விசாரணை முடிவடைந்த நிலையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்ப உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்தது.