சொத்து குவிப்பு வழக்கு: ஆஜராவதில் இருந்து ஜெ.வுக்கு மட்டும் சுப்ரீம் கோர்ட் விலக்கு
1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கு பல ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது.
அண்மையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் புதிய நீதிபதியாக முடி கவுடர் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நாளை (30-ந் தேதி) நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆனால் தமிழக சட்டசபை நடந்து வருவதால் இந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுத்தாக்கல் செய்தார். அத்ததுடன் புதிய நீதிபதி முடி கவுடர் நியமனத்துக்கு எதிராகவும் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை முடியும் வரை பெங்களூர் நீதிமன்ற விசாரணைக்கு தடையும் நான்கு பேர் சார்பில் கோரப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பி,எஸ்,சவுகான், எஸ்,ஏ,பாப்டே ஆகியோர், பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து ஜெயலலிதாவுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டனர். ஆனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.