‘குரோர்பதி’ விவகாரம்... அமிதாப்பின் ஐடி விவரங்களை மீண்டும் ஆய்வு செய்ய கோர்ட் அனுமதி
டெல்லி: பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் 2001 -02ம் ஆண்டுக்கான வருமான வரி விபரங்களை மீண்டும் ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் எனப் புகழப்படும் அமிதாப்பச்சன் பங்கேற்ற பிரபல நிகழ்ச்சி கோன் பனேகா குரோர்பதி. கடந்த 2001 -02ம் ஆண்டுகளில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் மூலம் பெற்ற வருமானத்திற்கு அமிதாப், உரிய வரி கட்டவில்லை என அவர் மீது மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அப்போது, அமிதாப்பின் 2001 -02ம் ஆண்டிற்கான வருமான வரித்தாக்கலை மீண்டும் ஆய்வு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என வருமான வரித்துறை வேண்டுகோள் விடுத்தது. ஆனால், அதற்கு மும்பை நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது வருமான வரித்துறை. இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குறிப்பிட்ட அந்த 2001-02ம் ஆண்டுகளில் அமிதாப்பின் வருமான வரி விவரங்களை மீண்டும் ஆய்வு செய்யலாம் என அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே வரி ஏய்ப்பு தொடர்பான பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் அமிதாப் மற்றும் அவரது மருமகளான ஐஸ்வர்யாராயின் பேர் அடிபட்டு வரும் வேளையில், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமிதாப்பிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.