கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனையுடன் அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்
டெல்லி: கார்த்தி சிதம்பரம் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐ.என்.எஸ். மீடியாவுக்கு நிதித்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியதில் முறைகேடாக பணம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அவரது வீட்டில் சோதைனயும் நடத்தப்பட்டது.
இது குறித்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. அவர் விசாரணைக்கு ஆஜராகாததை தொடர்ந்து அவரை தேடப்படும் நபராக மத்திய அரசு அறிவித்து, லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டது.
இதனால் அவர் வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டது. ஆனால் கார்த்தி சிதம்பரமோ, தான், தனது மகளின் படிப்பு தொடர்பாகவும், பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் நோக்கத்திற்காகவும், இருமுறை இங்கிலாந்து செல்ல வேண்டியுள்ளதால் அதற்காவது அனுமதி தரும்படி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது. டிசம்பர் 1 முதல் 10ம் தேதி வரை வெளிநாடு செல்ல கார்த்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், வெளிநாடு சென்றால் டிசம்பர் 11ம் தேதி இந்தியாவிற்கு திரும்பிவட வேண்டும் என்றும், பயணத்தை நீடித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்றும் உச்சநீதிமன்றம். எச்சரித்துள்ளது.