மும்பையில் பலாத்காரத்தால் கருவுற்ற சிறுமியின் 32 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
மும்பையில் பாலியல் பலாத்காரத்தால் கருவுற்ற 13 வயது சிறுமியின் 32 வாரக் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லி: இந்த அனுமதியின்படி மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (செப் 8) சிறுமிக்குக் கருக்கலைப்பு நடைபெறும் என பெண் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தால் கர்ப்பம் தரித்தார். இந்நிலையில், சிறுமி வயிற்றில் வளரும் 32 வாரக் கருவைக் கலைப்பதற்கு அனுமதி கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சினேகா முகர்ஜி என்ற வழக்கறிஞர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கருக்கலைப்புக்குச் சிறுமியின் உடல் ஒத்துழைக்குமா என்பதைக் கண்டறிந்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறு மும்பை ஜே.ஜே. மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த ஆய்வறிக்கை இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமிதவா ராய், கன்வில்கர் ஆகியோர் முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த நீதிபதிகள், சிறுமியின் 32 வாரக் கருவைக் கலைக்க அனுமதி அளித்தனர்.
கருக்கலைப்பு 8 ஆம் தேதி நடைபெறும், சிறுமி 7 ஆம் தேதியே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரத்தால் கருவுற்ற 10 வயதுச் சிறுமி தன்னுடைய 32 வாரக் கருவைக் கலைக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த ஜூலை 28ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இதற்கு அனுமதி அளிக்க மறுத்தது. கருக்கலைப்பு சிறுமிக்கும் குழந்தைக்கும் மருத்துவ ரீதியாக ஆரோக்கியமற்றது என்று மருத்துவ அறிக்கை கூறியதை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் கருக்கலைப்புக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டது. சமீபத்தில், அந்த சிறுமிக்குக் குழந்தை பிறந்தது.
நீதிமன்ற உத்தரவின் பேரில், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கருக்கலைப்பு செய்வதை முடிவு செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் நிரந்தர மருத்துவக் குழுவை அமைக்கக் கடந்த வாரம் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் 155 நிமிடங்களுக்கு ஒருமுறை 16 வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார். 10 வயதுக்கும் குறைவான குழந்தை ஒவ்வொரு 13 மணி நேரத்துக்கு ஒரு முறை வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மாதத்திற்கு ஒரு சிறுமி கருக்கலைப்பு வழக்கு தொடரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.