பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!
டெல்லி: பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட மும்பை பெண் ஒருவரின் வளர்ச்சி குன்றிய 24 வார கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை அவரடன் பழகிவந்த நபர் திருமண வாக்குறுதி அளித்து பலாத்காரம் செய்துள்ளார்ர். இந்தப் பெண் கருவுற்ற நிலையில் அதனைக் கலைக்க 24 வாரங்களுக்குப் பிறகு முயற்சி செய்த போது கருக்கலைப்பு குறித்த சட்டம் அதற்கு இடையூறாக இருந்தது.
அதாவது 20 வாரங்களுக்கு மேலான கருவை கலைக்கக் கூடாது என்று 1971-ம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் கருக்கலைப்புக்கு அனுமதி கோரி அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அதில், "நான் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்குப் பிறக்கும் குழந்தை மூளை, உடல் குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள மருத்துவர்கள், கருக்கலைப்பு மட்டும் செய்ய மறுத்துவிட்டனர்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் அருண் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்தரித்த பெண்ணின் நிலைமை குறித்த மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கருவின் வளர்ச்சி தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேராமல், கருவைக் கலைக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இந்த மருத்துவ அறிக்கையை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், கருவில் உள்ள சிசு குறைபாட்டுடன் இருந்தால் கருக்கலைப்பு செய்யலாம் என்று பரபரப்பு தீர்ப்பளித்தது.