கே.வி பள்ளிகளில் 'பிரேயர்' மூலம் மதம் திணிக்கப்படுகிறதா?... அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி?
கேந்திர வித்தியாலய பள்ளிகளில் இந்தியில் பிரேயர் நடத்துவதன் மூலம் மதம் திணிக்கப்படுகிறதா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி: அரசியல் சாசன விதியை மீறி கேந்திர வித்யாலயா பள்ளிகளில் காலையில் நடைபெறும் பிரேயர்களில் மதம் திணிக்கப்படுகிறதா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து கேந்திர வித்யாலயா பள்ளிகளும், மத்திய அரசும் 2 வாரத்தில் பதில் அளிக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் விநாயக் ஷா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் காலையில் கட்டாயம் பிரேயர்களில் கலந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களின் மதம், நம்பிக்கையை கடந்து இந்த பிரேயரில் பங்கேற்று இறைவணக்கப் பாடலை பாட வேண்டும். இந்த இறைவணக்கப்பாடலில் சமஸ்கிருத மற்றும் இந்திவார்த்தைகளே அதிகம் உள்ளன என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்திய குடிமனாக இருக்கும் எவர் ஒருவருர்ககும் தன்னுடைய மதத்தை பின்பற்றும் உரிமை இருக்கிறது, ஆனால் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் நடக்கும் பிரேயர் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அரசுப் பள்ளிகளில் எந்த மதத்தை குறிப்பிடும்படியான இறைவணக்கப் பாடல்களும் இல்லை என்றும் ஷா தன்னுடைய வழக்கில் சுட்டிக்காட்டியுள்ளார்.
விரும்பாத பெற்றோர்
நாடு முழுவதும் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் மட்டுமே ஒரு மதத்தை திணிக்கும் வகையிலான இறைவணக்கப் பாடல்கள் உள்ளன. இதனால் சிறுபான்மையின பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு இது பாகுபாட்டை ஏற்படுத்தும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. சில பெற்றோரும் இது அரசியலமைப்புக்கு எதிரானது என்றே கருதுவதாகவும் ஷா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
சமஸ்கிருத இறை வணக்கப் பாடல்
1964ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த பிரேயர் முறை கேந்திர வித்யாலயா பள்ளிகள் மற்றும் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் இந்துத்துவாவை புகுத்துகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. மாணவர்கள் கண்களை மூடிக் கொண்டு, கைகளை கூப்பி நின்றவாரு சமஸ்கிருத வரிகள் கொண்ட இந்த இறைவணக்கப் பாடலை பாட வேண்டும்.
மாணவர்களுக்கு என்ன பயன்?
அவ்வாறு செய்யாத மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்ற மாணவர்கள் முன்னிலையில் தண்டனைகள் வழங்குவதும் நடக்கிறது. இது போன்ற இறைவணக்கப் பாடல்களால் விஞ்ஞான ரீதியில் பார்க்கும் போது எந்த நன்மையுமே இல்லாத போது இது ஏன் பள்ளிகளில் கட்டாயப்படுத்தப்படுகிறது என்றும் மனுதாரர் கேள்வி எழுப்பியிருந்தார்.
பதில் அளிக்க உத்தரவு
இந்த வழக்கு நீதிபதி நரிமன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுமிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியலமைப்பு பிரச்னை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இது குறித்து மத்திய அரசு மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளிகள் இரண்டு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.