புராதான சின்னம்.. சேது சமுத்திர திட்டம்.. சு.சாமி வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: சேது சமுத்திரம் தொடர்பான நிலை குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேது கால்வாயை புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என்பது பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியின் வழக்கு. உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி போப்டேவிடம் தமது வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினர். அப்போது, மத்திய அரசின் நிலை குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் 3 மாதங்களுக்குப் பின்னர் இவ்வழக்கை விசாரிப்பது தொடர்பாக தம்மிடம் தெரிவிக்குமாறு சுப்பிரமணியன் சுவாமியிடம் தலைமை நீதிபதி போப்டே தெரிவித்தார்.
சேது கால்வாய் திட்டத்தைச் செயல்படுத்தினால் தென் தமிழகம் பொருளாதாரத்தில் மேம்படும். வங்காள விரிகுடாவில் இருந்து இந்திய பெருங்கடலை சுற்றி அரபிக் கடலுக்கு செல்லும் தற்போதைய கப்பல் போக்குரத்து நிலைமையும் மாறும். நேரடியாக வங்காள விரிகுடாவில் இருந்து அரபிக் கடலை சென்றடைய முடியும்.
ஆனால் சேது கால்வாய் என்பது ராமர் அமைத்த பாலம் என்பதால் அதை இடிக்கக் கூடாது; அப்பகுதியில் கப்பல் போக்குவரத்து கூடாது என்பது சேது கால்வாய் எதிர்ப்பாளர்களின் கருத்து. ஆகையால் சேது கால்வாயை புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.