தமிழகத்தில் ஏன் இன்னும் லோக் ஆயுக்தா உருவாக்கவில்லை? சுப்ரீம் கோர்ட் 'சுளீர்'
டெல்லி : தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் ஊழல் ஒழிப்பு அமைப்பான லோக் ஆயுக்தா, லோக்பால் நீதிமன்றங்களை ஏன் அமைக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், எம்.பி., எம்எல்ஏ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினாலோ, ஊழல் செய்தாலோ அதுபற்றி விசாரிப்பதற்காக லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் கடந்த 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு ஜனவரியில் இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.
இதனையடுத்து அந்த மாதம் முதலே இந்த சட்டமானது நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், இதுவரை 12 மாநிலங்கள் இந்த சட்டத்தை இயற்றவில்லை, நீதிமன்றங்களையும் அமைக்கவில்லை. இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2013-ம் ஆண்டே லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்பட்டு 2014-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்துவிட்டது.
ஆனால், இன்னும் பெரும்பாலான மாநிலங்கள் லோக் ஆயுக்தா நீதிமன்றங்களை அமைக்க முன்வரவில்லை. லோக் ஆயுக்தா நீதிமன்றங்களுக்கு போதுமான நிதியை மாநில அரசுகள் ஒதுக்காததால், கட்டமைப்பு வசதிகள் இன்றி மோசமான நிலையில் செயல்பட்டு வருவதாகவும் உபாத்யாய் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ரஞ்சன் கோகாய், ஆர். பானுமதி ஆகியோர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஒடிசா மாநிலத்தில் லோக் ஆயுக்தா நீதிமன்றம் அமைக்கப்பட்டுவிட்டதா என்று அந்த மாநில தலைமைச்செயலாளரிடம் கேள்வி எழுப்பினர்.
இதே போன்று தமிழகம், ஜம்முகாஷ்மீர், புதுச்சேரி, தெலங்கானா, திரிபுரா, அருணாச்சலப்பிரதேசம், டெல்லி, மேற்குவங்கம் ஆகிய 12 மாநிலங்களும் கூட ஏன் இன்னும் லோக் ஆயுக்தா அமைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். இது குறித்து 12 மாநில தலைமைச் செயலாளர்களும் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரத்தில் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.