குழு வன்முறை.. அறிக்கையளிக்காத மாநிலங்கள்.. உச்சநீதிமன்றம் கெடு
டெல்லி: குழு வன்முறை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 8 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் ஆகியவை, உச்சநீதிமன்றத்தில், இரு வாரங்களில் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பசு கடத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சொல்லி குழுவாக கொலை செய்யும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கடந்த ஜூலை மாதம், உச்சநீதிமன்றம் 12 அம்சங்கள் கொண்ட வழிகாட்டும் நெறிமுறைகளை வழங்கியது. இந்த வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி அதுகுறித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த முறை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 29 மாநிலங்களில் 9 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களில் 2 மட்டுமே அறிக்கை சமர்ப்பித்தன. இதையடுத்து, பிற மாநிலங்களும் அறிக்கை சமர்ப்பிக்காவிட்டால், அந்தந்த மாநில தலைமைச் செயலாளர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 8 மாநிலங்கள் மற்றும் டெல்லி யூனியன் பிரதேச அரசுகள், இதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதிகள் ஒருபக்கம், குழு வன்முறையை தவிர்ப்பது தொடர்பாக பிரதமரும், உள்துறை அமைச்சரும் பேசி வரும் நிலையில், டெல்லி (காவல்துறை மத்திய அரசிடம் உள்ளது) அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்றனர்.
இதையடுத்து 2 வாரங்களுக்குள் அறிக்கையளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.